'நினைவுகூர்ந்தால் உடனடியாக கைதுசெய்ய வேண்டும்'
தடைசெய்யப்பட்ட விடுதலைப்புலிகள் இயக்கத்தை நினைவுகூரும் வகையில் வடக்கில் எந்தவொரு நிகழ்வும் இடம்பெறக் கூடாது. அதையும் மீறி யாரேனும் நினைவுகூர்ந்தால் உடனடியாக கைதுசெய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அனுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்தார். பாதுகாப்பை பலப்படுத்தி நாட்டை ஒற்றுமைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார் . முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி நிகழ்வு ஆரம்பமாகியுள்ள நிலையில் பாதுகாப்பு அமைச்சரும் கட்சியின் தலைவரும் என்ற வகையில் ஜனாதிபதியின் நிலைப்பாடு என்னவென வினவிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார் . அவர் மேலும் குறிப்பிடுகையில், விடுதலைப் புலிகள் அமைப்பு நீண்ட காலமாகவே இலங்கையில் தடை செய்யப்பட்ட அமைப்பாகும்.விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவுகூரும் எந்த செயற்பாடுகளும் இலங்கையில் சட்ட விரோதமானதே. அந்த நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பை நினைவு கூர்வதும் சட்ட விரோதமான விடயமேயாகும். இவ்வாறான விடயங்களை தடை செய்ய வேண்டியது அரசாங்கத்தின் கடமை. பாதுகாப்பை பலப்படுத்தி சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க வேண்டும். இந்த அரசாங்கம் பழிவாங்கல் அரசியலை செய்யாது பாதுகாப்பு விடயத்தில் சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும். முன்னாள் அரசாங்கத்தில் உள்ளவர்களை கைது செய்து பழிதீர்ப்பதை மட்டுமே செய்யாது விடுதலைப் புலிகளை நினைவுகூரும் அமைப்பினரையும் நபர்களையும் கைது செய்ய வேண்டும். அதேபோல் யாரேனும் வடக்கில் புலிகளை நினைவுகூர்ந்தால் அவர்களை கைது செய்யும் அதிகாரம் எப்போதும் பாதுகாப்பு பிரிவினருக்கு வழங்கப் பட்டுள்ளது. பாதுகாப்பு பிரிவு தமது கடமையை செய்யவேண்டும். மேலும் பாதுகாப்பு விடயத்தில் ஜனாதிபதியின் பங்கு முக்கியமானது. இவ் விடயம் தொடர்பில் நாம் பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவருவோம் எனவும் தெரிவித்தார்.
'நினைவுகூர்ந்தால் உடனடியாக கைதுசெய்ய வேண்டும்'
Reviewed by Author
on
May 14, 2015
Rating:

No comments:
Post a Comment