இந்திய மீனவர்களின் வருகையை நிறுத்தக்கோரி வடமாகாண மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட நடவடிக்கை-என்.எம்.ஆலம்.
சமகாலத்தில் வடமாகாண கடற்தொழிலாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வை பெற்றுத்தரக்கோரி வடமாகாண மீனவர்கள் அனைவரும் ஒன்றினைந்து எதிர்வரும் மாதம் யாழ்ப்பாணத்தில் பாரிய அளவில் கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவரும்,மன்னார் மாவட்ட மீனவ சங்க சமாச தலைவருமான என்.எம்.ஆலம் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,
இந்திய மீனவர்கள் தொடர்ச்சியாக இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் தொடர்ச்சியாக இலங்கை மீனவர்கள் குறிப்பாக வடமாகாண மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.
இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்து மீன் பிடிப்பது தொடர்பில் இந்திய அரசும் இலங்கை அரசும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாது மௌனம் காத்து வருகின்றனர்.
மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கடந்த வாரம் மன்னாரில் இடம் பெற்ற விசேட கலந்துரையாடலில் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பல கருத்துக்களை முன் வைத்தனர்.
இந்த நிலையில் எதிர் வரும் மாதம் வடமாகாண ரீதியில் மன்னார்,கிளிநொச்சி,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்களை ஒன்றினைத்து பாரிய அளவிலான கவனயீர்ப்பு போராட்டத்தை யாழ்ப்பாணத்தில் நடாத்த தீர்மானித்துள்ளோம்.
குறித்த போராட்டம் யாழ் அரச அலுவலகத்திற்கு முன் அல்லது யாழ் இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன் நடத்தலாம் என இரு வகையாக தீர்மானித்துள்ளோம்.
வடமாகாண கடற்தொழிலாளர் இணையம் நிர்ணயிக்கும் திகதியில் பாரிய அளவில் மக்களையும்,மீனவர்களையும் ஒன்றினைத்து குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படும்.
இலங்கையில் உள்ள தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைமைகளை முழுமையாக கைவிட வேண்டும் என்றால் ஒட்டு மொத்த மீனவர்களின் ஒருமித்த கோரிக்கையான இந்திய மீனவர்களின் வருகையை தடை செய்ய வேண்டும்.என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்திய மீனவர்களின் வருகையை நிறுத்தக்கோரி வடமாகாண மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட நடவடிக்கை-என்.எம்.ஆலம்.
Reviewed by NEWMANNAR
on
June 19, 2015
Rating:
No comments:
Post a Comment