சம்பந்தனை ஓரம்கட்டிவிட்டு விக்கியை தலைவராக்க முயற்சி : பொதுபலசேனா

நல்லிணக்கம் பற்றி பேசும் தமிழ் அரசியல் தரப்பு வட மாகாண சபையில் இனவாத பிரேரணையினை நிறைவேற்றியிருப்பது நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலென தெரிவிக்கும் பொதுபல சேனா சம்பந்தனை பின் தள்ளிவிட்டு வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனை கூட்டமைப்பின் தலைவராக்கவே புலம்பெயர் சர்வதேச அமைப்புக்கள் முயற்சிப்பதாகவும் குற்றம் சுமத்தியது.
பொதுபலசேனா அமைப்பினால் நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவ் அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது;
வட மாகாண சபையின் செயற்பாடுகள் அண்மைக் காலங்களில் மிகவும் மோசமானதாகவுள்ளன. இனவாத பிரிவினைக்கு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பும் வட மாகாண சபையும் முயற்சிக்கின்றது என்பது அண்மையில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட பிரேரணையின் மூலம் தெரிவந்துள்ளது.
கடந்த காலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் வட மாகாணத்தை சரியாக கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருந்தார். யுத்தத்தை வென்றவுடன் வடக்கிற்கு உரிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டின் கீழ் இருந்தது. ஆனால் தற்போது நிலைமை மாறிவிட்டது.
பழைய சூழ்நிலை உருவாகின்றது
ஆட்சி மாற்றம் ஏற்பட்டதுடன் நாட்டின் நிலைமைகள் மீண்டும் பின்நோக்கி நகர்கின்றன. 2002ஆம் ஆண்டில் நாடு எவ்வாறானதொரு அரசியல் சூழ்நிலையில் இருந்ததோ அவ்வாறானதொரு நிலைமை தற்போது மீண்டும் உருவாகி வருகின்றது. அன்று மகிந்த ராஜபக் ஷ ஜனாதிபதியின் ஆட்சியில் பூனைகள் போல் பதுங்கி கொண்ட வட மாகாண சபை இன்று மீண்டும் புலிகளாக மாற ஆரம்பித்து விட்டது. வடமாகாண சபையில் தற்போது கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானமானது இலங்கைக்கு மிகவும் அச்சுறுத்தலான ஒன்றாகும். இவ்விடயத்தினை சாதாரணமாக எடுத்துக்கொண்டால் நாடு பாதாளத்தின் பக்கமே கொண்டு செல்லப்படும்.
விக்கி பக்கம் சர்வதேசம்
வட மாகாண சபையின் இனப்படுகொலை தொடர்பில் பிரேரணை கொண்டுவரப்பட்டமை சர்வதேசத்தினை மகிழ்விக்கவேயாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் அமைதி காக்கின்ற நிலையில் கூட்டமைப்பின் தலைமையில் இருந்து சம்பந்தனை ஓரங்கட்டிவிட்டு சி.வி.விக்னேஸ்வரனை கூட்டமைப்பின் தலைவராக்கும் முயற்சிகள் சர்வதேச மற்றும் புலம்பெயர் புலி அமைப்புகளினால் முன்னெடுக்கப்படுகின்றது. இன்னும் சிறிது காலத்தில் இது நடந்தே தீரும்.
எமக்கு எதிராக அடக்குமுறை
அதேபோல் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் பொதுபல சேனா அமைப்பிற்கு இடம் வழங்கப்பட்டது. எமது கருத்துக்களை முன்வைக்கவும் அநியாயங்களை தட்டிக்கேட்கவும் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால், புதிய அரசில் பெளத்தமும் எமது அமைப்பும் புறக்கணிக்கப்பட்டு வருகின்றது.
நாம் பௌத்த அமைப்பாக செயற்படுவது தவறெனி வட மாகாண சபையின் செயற்பாடுகளை என்னவென்று கூறுவது?குற்றம் சுமத்தி எம்மை புறக்கணித்து விட்டு பிரிவினையினை தூண்டும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கும் வட மாகாண சபைக்குமே அரசாங்கம் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சம்பந்தனை ஓரம்கட்டிவிட்டு விக்கியை தலைவராக்க முயற்சி : பொதுபலசேனா
Reviewed by Author
on
June 17, 2015
Rating:

No comments:
Post a Comment