அண்மைய செய்திகள்

recent
-

மொழி என்பது ஒரு தேசிய இனத்தின் அடையாளம்! பதுளையில் அருட்திரு தமிழ் நேசன் அடிகளார்

மொழி என்பது வெறும் ஒலி மட்டும் அல்ல! மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு சாதனம் மட்டுமல்ல!  மொழியைப்பற்றி பேசுகின்றபோது, 'மொழி என்பது எண்ணங்களை எடுத்துச்செல்லும் ஊடகம்தானே' என்று சிலர் சாதாரணமாகச் சொல்லலாம். ஆனால் மொழியின் பரிமாணங்கள் பரந்துபட்டது.  மொழி என்பது ஒரு தேசிய இனத்தின் அடையாளம்! மொழி இல்லையேல் ஒரு இனம் இல்லை. மொழி இல்லையேல் ஒரு இனத்தின் இலக்கியங்கள் இல்லை, கலைகள் இல்லை, பண்பாடுகள் இல்லை, மரபுகள் இல்லை, சமயங்கள் இல்லை. ஒரு இனத்தின் இலக்கியங்களை, கலைகளை, பண்பாடுகளை, மரபுகளை, சமய நம்பிக்கைகளை தாங்கி நிற்பது மொழி என அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் தெரிவித்தார். 

  கடந்த சனிக்கிழமை (30.05.2015) பதுளை நகரில் அமைந்துள்ள ஊவா மாகாண நூலக கேட்போர் மண்டபத்தில் இடம்பெற்ற ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக மாணவர்கள்  நடத்திய 'மலைத்தென்றல் - 2015' என்ற கலை கலாசார விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அடிகளார் இவ்வாறு தெரிவித்தார்.  
  மன்னார் மறைமாவட்ட சமூகத்தொடர்பு அருட்பணி மையம் கலையருவி என்ற அமைப்பின் இயக்குனரும், மன்னா என்ற கத்தோலிக்க மாதாந்தப் பத்திரிகையின் ஆசிரியருமான அருட்தந்தை தமிழ் நேசன் அடிகளார் அங்கு தொடர்ந்து உரையாற்றும்போது தெரிவித்ததாவது, 
  உலக வரலாற்றுப் பக்கங்களைத் திருப்பிப்பார்த்தால் ஒரு உண்மை நமக்குத் தெளிவாகும். அதாவது ஒரு இனத்தை அழிக்கவேண்டும் என்றால் எதிரிகள் முதலில் அந்த இனத்தில் மொழியை அழித்திருக்கின்றார்கள். மொழி அழிந்தால் ஒரு இனம் தானாகவே அழி;ந்துவிடும். 
மொழி என்பது ஆன்மா பயணிக்கும் பாதை. ஒரு தலைமுறை அடுத்த தலைமுறைக்கு தன் பண்பாட்டை எடுத்துச் செல்லும் வழி. தமிழர்களாகிய நம்மைப் பொறுத்தவரை தமிழ் மொழி என்பது வெறும் 'வழி' மட்டுமல்ல, அதுதான் நமது 'விழி.' ஆதனால்தான் பாவேந்தார் பாரதிதாசன் பாடுவார், 'தமிழுக்கு அமுதென்று பேர், அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!'

  இரண்டாயிரம் ஆண்டுகால தமிழின் எழுச்சி, வீழ்ச்சி - வெளிச்சம், இருட்டு – மேடு, பள்ளம் இவற்றை உற்றுப்பார்த்தால் ஒரு உண்மை நமக்குப் புலப்படும். அதாவது தமிழனின் மொழிக்கு ஊறு நேர்ந்தபோதெல்லாம் அவனது அரசியல், பொருளாதார, பண்பாட்டின் அடித்தளங்கள்  ஆட்டம்கண்டிருப்பதைப் பார்க்கின்றோம்.
 இதுபோன்ற தமிழ் விழாக்கள் மூலமாகத்தான் தமிழின் சிறப்பை நாம் உணர முடியும். தமிழராகிய நம் தனிப்பெருமை எத்தகையது என்பதைச் சிந்திக்க முடியும்.  இந்த விழா நம்மை நாமே திரும்பிப் பார்க்கின்ற விழா. நமது அருமை பெருமைகளை சீர்தூக்கிப் பார்த்து மகிழுகின்ற விழா.

 இந்நிகழ்வில் பேராசிரியர் சி. மௌனகுரு அவர்கள் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டார். ஊவா வெல்லச பல்கலைக்கழக துணை வேந்தர் கலாநிதி ஜி. சந்திரசேன அவர்கள் கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்டார். இப்பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ர விரிவுரையாளர் திரு. மா. ரூபவதனன் அவர்கள் மாணவர்களை ஒருங்கிணைத்து இந்நிகழ்வை சிறப்பாக நடாத்தியிருந்தார். 










 
மொழி என்பது ஒரு தேசிய இனத்தின் அடையாளம்! பதுளையில் அருட்திரு தமிழ் நேசன் அடிகளார் Reviewed by NEWMANNAR on June 01, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.