திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு! கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் சித்தார்த்தன் விளக்கம்
இனப்பிரச்சனைக்குத் தீர்வாக திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஷ்டி ஆட்சியொன்றை ஏற்படுத்துவதை உள்ளடக்கியதாகவே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அமையப் பெற்றுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவரும் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
மேலும், தென்னிலங்கை கட்சிகளைச் சேர்ந்தவர்கள் வட கிழக்கில் போட்டியிடுகின்ற நிலையில் தாம் சார்ந்த கட்சிக் கொள்கைகளுக்கு மாறாகவே மக்களிடம் வாக்குறுதிகளை தெரிவித்து வாக்குக் கேட்டு வருகின்றனர்.
ஆகவே மக்களை ஏமாற்றுகின்ற இத்தகைய தரப்பினர்களை மக்கள் புரிந்து கொண்டு தமிழினத்தின் விடுதலைக்கான பயணத்தில் கூட்டமைப்போடு இணைந்து எமது கட்சியைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டார்.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு நடைபெறவிருக்கின்ற தேர்தல் நிலைமைகளும் கட்சியின் நிலைப்பாடும் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் தமிழ் மக்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மகிந்த அரசாங்கம் மேற்கொண்டு வந்திருந்தது. இந் நிலையில் அந்த அரசை மாற்ற வேண்டுமென தமிழ் மக்களும் ஏனைய மக்களும் விரும்பி மாற்றத்தையும் ஏற்படுத்தியிருந்தனர். இவ்வாறு ஒட்டு மொத்த தமிழ் மக்களும் மிகத் தெளிவாக சிந்தித்து தமது பலத்தையும் வெளிக்காட்டியிருந்தனர்.
இதே போன்றே நடைபெறவிருக்கின்ற தேர்தலிலும் தமிழ் மக்கள் அனைவரும் ஓரணியாக நின்று தமது பலத்தை எடுத்துக் காட்ட வேண்டும். தமிழ் மக்களின் அத்திவாசிய பிரச்சனைகள் முதல் அடிப்படைப் பிரச்சனைகள் வரை அனைத்துப் பிரச்சனைகளும் தீர்க்கப்படாமலேயே உள்ளது.
இவ்வாறு தீர்க்கப்படாமல் இருக்கின்ற பிரச்சனைகளை தீர்க்க வேண்டுமென்றே நாம் வலியுறுத்தி வருகின்றோம். ஆனால் தீர்க்கக் கூடிய பிரச்சனைகளும் தீர்க்கப்படாத நிலையே இருக்கின்ற போதும் இவற்றைத் தீர்ப்பதாக மக்களுக்குப் தென்னிலங்கையைச் சார்ந்த கட்சிகள் உட்பட பலரும் வாக்குறுதியளிக்கின்றனர்.
குறிப்பாக தென்னிலங்கையைச் சேர்ந்த கட்சிகள் தமிழர் தாயகமான வட கிழக்கில் போட்டியிடுகின்ற போது தமிழ் மக்களுக்குப் பலவற்றைக் கூறுகின்றனர். அவ்வாறு கூறுகின்ற பலவும் அவர்கள் சார்ந்த கட்சியின் கொள்கைகளில் முற்றாக மாறுபட்டே உள்ளது.
அதாவது ஐக்கிய தேசியக் கட்சியாக இருக்கலாம் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பாக இருக்கலாம். அக்கட்சி சார்பில் இங்கு போட்டியிடுகின்றவர்கள் மக்களுக்கு பல வாக்குறுதிகளையும் ஆசை வார்த்தைகளையும் நடைமுறைச் சாத்தியமற்றவையையும் பேசலாம்.
இவ்வாறு தென்னிலங்கையிலிருந்து வருகை தரும் கட்சிகள் இங்குள்ள இளைஞர், யுவதிகளின் சுயவிபரக் கோவைகளை சேகரிக்கின்றன. அதனை நம்பி இளைஞர்கள் ஏமாற வேண்டாம். வெற்றிடங்கள் மட்டுப்படுத்தப்பட்ட நிலையிலுள்ளது. அனைவருக்கும் வாய்ப்பு அவர்களால் முடியாது. அவர்கள் உங்களை ஏமாற்றுகின்றனர்.
இருந்தும் அவையனைத்தையும் தாம் செய்வோம், செய்யப்போகிறோம், செய்தோம் என்று இங்கே தான் கூற முடியும். இதனை தென்னிலங்கை சென்று அவர்களால் கூற முடியாது. ஏனெனில் அவர்களின் கட்சித் தலைமை அதற்கு இடமளிக்காது. எனவே தொடர்ந்தும் ஏமாற்றுகின்ற இத்தகைய செயற்பாடுகளை மக்கள் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
இத்தகையதொரு நிலையிலேயே கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமும் தாயாரிக்கப்பட்டு இன்றைய தினம் வெளியிட்டு வைக்கப்படவுள்ளது. கூட்டமைப்பின் இத் தேர்தல் விஞ்ஞாபனமானது, அங்கத்துவக் கட்சிகளின் கருத்துக்களையும் உள்வாங்கி தயாரிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் கருத்து வேறுபாடுகள் இருந்தது உண்மை.
ஆனால் தீர்வுத்திட்ட விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருக்கும் பங்காளிக் கட்சிகளுக்கும் இடையில் எந்தவொரு மாற்றுக் கருத்துக்களும் இல்லை. இவ்வாறு எமது இலக்கை அடைவதற்கு கருத்து வேறுபாடுகள் இருந்ததில்லை. கூட்டமைப்புக்குள் பிரிவு ஏற்பட்டுள்ளது என வெளியில் கருத்துக்கள் இருக்கின்றன.
ஆனால் நாங்கள் ஒற்றுமையாக இருக்கின்றோம். எங்கள் ஒற்றுமையை தேர்தல் மூலம் தமிழ் மக்கள் காப்பாற்ற வேண்டும்.
நாம் ஒன்றுபட்டு குரல் கொடுத்தால் நியாயமான ஒரு பாதையை நோக்கி பயணிப்பதற்கு வாய்ப்புக்கள் இருக்கும்.
அனைத்து தேர்தல்களுமே தமிழ் மக்களுக்கு மிக முக்கியமான தேர்தல் ஆக உள்ளது. இந்த தேர்தலைப் பொறுத்தவரையில் நாங்கள் எவ்வாறான பலமுள்ளவர்கள் என்பதைக் காட்டும் தேர்தலாக இருக்கின்றது. எனவே இதற்கான பலத்தை மக்கள் வழங்க வேண்டுமென்று கோருகின்றோம். என்றார்.
திம்புக் கோட்பாட்டின் அடிப்படையில் ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு! கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் சித்தார்த்தன் விளக்கம்
Reviewed by NEWMANNAR
on
July 27, 2015
Rating:

No comments:
Post a Comment