வவுனியா அரச அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு விசாரணைக்குழு நியமிப்பு
வவுனியா அரசாங்க அதிபர் பந்துல ஹரிச்சந்திர மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என அமைச்சினால் அறிவிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வீ.கே சிவஞானம் தெரிவித்தார். வடக்கு மாகாணசபையின் 32 ஆவது அமர்வு இன்று கைதடியில் உள்ள மாகாண சபையின் கட்டத்தொகுதியில் அவைத்தலைவர் சி.வீ.கே சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. அதன்போதே இந்த தகவலை விடுத்திருந்தார்.
மேலும், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களின் சிறப்புரிமையினை மீறினார் என்ற குற்றச்சாட்டு வவுனியா அரச அதிபர் மீது முன்வைக்கப்பட்டு வடக்கு அவையில் பிரேரணைகள் கொண்டு வரப்பட்டும் அவருக்கு எதிரான நடவடிக்கைகள் எவையும் எடுக்கப்பட்டவில்லை. இதனைக் கருத்தில் கொண்டு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி கடந்த 31 ஆவது அமர்வில் உறுப்பினர்கள் அவைக்கதவுகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவைத்தலைவர் உறுதியளித்தமைக்கு இணங்க அன்றைய தினம் அவை ஆரம்பிக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்தநிலையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதனால் நடவடிக்கை எடுக்கமுடியாத நிலை காணப்படுகின்றது. மீண்டும் இன்று மாகாண அமர்வு இடம்பெற்றது. நடவடிக்கை எடுப்பதாக அவைத்தலைவர் உறுதியளித்தமைக்கு இணங்க தன்னால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பில் இன்றைய அமர்வில் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், குறித்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க , உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோசெப் மைக்கல் பெரேரா , வடக்கு மாகாண ஆளுநர் பளிகக்கார, த.தே.கூ தலைவர் சம்பந்தன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா , சுமந்திரன் ஆகியோருக்கு தெரியப்படுத்தப்பட்டது. அத்துடன் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் ஜோசெப் மைக்கல் பெரேராவுடன் நேரடியாகவும் பேசியிருந்தேன் . அதன்போது ஒழுக்காற்று நடவடிக்கை மூலமே ஒரு உயர் அதிகாரியின் இடமாற்றத்தை செய்ய முடியும் என்பதால் இதனை விசாரிப்பதற்கு விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
விசாரணைக்குழுவினரிடம் உறுப்பினர்கள் முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஆற்றுப்படுத்துவதாகவும் என்னிடம் தெரிவித்திருந்தார். அத்துடன் த.தே.கூ தலைவரும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சருக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதற்கான பதிலிலும் ஒழுக்காற்றுகுழு நியமிக்கப்பட்டமை தொடர்பிலும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேர்தல் காலம் என்பதால் வவுனியா அரச அதிபர் தெரிவத்தாட்சி அலுவலகராக உள்ளமை தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தேர்தல் ஆரைணயாளரிடம் குற்றச்சாட்டு குறித்து தெரிவித்துள்ளார். தேர்தல் காலத்தின்போது மாற்றீடான ஒருவரை வவுனியாவுக்கு நியமிப்பதாகவும் தேர்தல் ஆணையாளர் உறுதியளித்துள்ளார் என்றும் தெரியப்படுத்தப்பட்டது. குறித்த விடயம் தற்போது விசாரணையில் உள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
வவுனியா அரச அதிபருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைக்கு விசாரணைக்குழு நியமிப்பு
Reviewed by NEWMANNAR
on
July 23, 2015
Rating:

No comments:
Post a Comment