பாரளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களின் நன்றி நவில் news
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பில் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக வன்னி தேர்தல்
மாவட்டத்தில் இலக்கம் 3ல் போட்டியிட்ட இ.சாள்ஸ் நிர்மலநாதன் ஆகிய என்னை வன்னி மாவட்ட வேட்பாளர்களில் அதிகூடிய விருப்பு வாக்குகளால்(34620) முதன்மை பெற வைத்து வன்னி பாராளுமன்றஉறுப்பினராக அமோக வெற்றியடைய செய்த வன்னி வாழ் தமிழ் பெருங்குடி மக்களுக்கு எனது மனம் நிறைந்த நன்றியினை
தெரிவித்துக்கொள்ள மிகவும் கடமைப்பட்டுள்ளேன்.
பராளுமன்ற தேர்தலில் எனக்களிக்கப்பட்ட வெற்றியானது தமிழ் தேசியக்கோட்பாட்டிற்கு கிடைத்த பெரு வெற்றியும்,
அங்கிகாரமுமாகும். தமிழ் தேசியம் என்பது வற்றா பெரு நதியாக தமிழ் மக்களின் மனங்களில் பிரவாகமாகவும் அணையாத
அக்கினி பிழம்பாகவும் காணப்படுகின்றமை இப்பாரளுமன்ற தேர்தல் மூலம் சர்வதேச உலகிற்கு சனநாயக ரீதியில் எமது
மக்களால் உணர்த்தப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கான யுத்தம் என்ற பொய் முகத்துடன் தமிழ் தேசியத்திற்கெதிராக சிங்கள இனவாதம் நடாத்திய
போரின் மன வடுக்களை நாம் தோற்றுப்போகாத இனம் என்பதை தமிழ் மக்கள் மிகத்தெளிவாக அடையாளப்படுத்தியுள்ளார்கள்.
எமது மக்களின் அரசியல் அபிலாசைகளை, உரிமைகளை, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டினை சனநாயக ரீதியில்
வென்றெடுக்க எமக்களிக்கப்பட்ட பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உயிர்ப்புள்ள கருவியாக இம்மியாவும் பிசகாது நான்
பயன்படுத்துவேன் என்பதை மீண்டும் ஒரு முறை இத்தருணத்தில் நான் நிச்சயப்படுத்துகிறேன். இப்பாராளுமன்ற தேர்தல் காலத்தில்
தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிப்பதற்கும் நிலைமாற்றுவதற்க்கும் மேற்கொள்ளப்பட்ட அயோக்கியத்தனங்களுக்கும்
எமது மக்கள் இடமளிக்காமல் எமது இன மான உணர்வுகளை அறிவுபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது.
மேலும் மன்னார்,வவுனியா மற்றும் முல்லைத்தீவு தேர்தல் தொகுதிகளில் எனது பாராளுமன்ற பிரதிநிதித்துவம்
உங்களது பிரதிநிதித்துவம் என்ற உணர்வோடு எனது வெற்றிக்காக மிகுந்த தமிழ் தேசிய உணர்வன்புடனும், அர்பணிப்புடனும் பங்காற்றிய
அன்புள்ளங்கள் வாக்காள பெருமக்கள் அனைவரையும் நன்றி பெருக்குடன் இச்சந்தர்ப்பத்தில் நான் நினைவுகூருகிறேன். அத்தோடு
தமிழ் தேசியத்தின் நிலைத்துவம் இம்மண்ணில் நீடித்து நிற்பதற்கு அரும்பெரும் தொண்டாற்றிய மன்னார் மறைமாவட்ட
ஆயர் மேதகு இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்களையும், அருட்தந்தையர்களையும் நன்றியுடன் நினைவுகூறுகிறேன். மேலும்
வணக்கத்திற்குரிய இந்து மத குருக்களிற்க்கும் ஏனைய மத மீடங்களை சார்ந்த வணக்கத்திற்குரியவர்களையும்
எனது மனம் நிறைந்த நன்றிகள் உரித்தாகட்டும். எனது தேர்தல் பிரசார பணிகளுக்கும் வெற்றிக்கும் இரவு பகல் அயாராது தோள்கொடுத்த
வலிசுமந்த சமூகப் பெரியார்கள், கிராமிய அபிவிருத்தி கூட்டமைப்புக்கள், மாதர் சங்கங்கள், விளையாட்டு கழகங்கள், மத நிறுவனங்கள்,
அரச சார்பற்ற நிறுவனங்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், முன்னைய பிரதே/நகர சபை உறுப்பினர்கள், என் அன்புக்குரிய நண்பர்கள்,
ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள், அனுதாபிகள், உறவினர்கள், வன்னி மாவட்ட இலங்கை தமிழரசு கட்சி அங்கத்துவர்கள், தமிழ் தேசியக்கூட்டமைப்பின் சக வேட்பாளர்கள், மற்றும் உறுப்பினர்கள்
ஆகியோர்கட்கும் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்வதோடு அதனை ஏற்றுக்கொள்ளுமாறும் உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், சமூக பொறுப்புணர்வுடனும், காலத்தின் தேவை கருதியும் எனது கருத்துக்களை, உணர்வுகளை மிக விரைவாக மக்களிற்கு
கொண்டு சென்ற மதிப்புக்குரிய அனைத்து ஊடகங்களிற்கும், ஊடக நண்பர்களிற்கும் மற்றும் முகநூல் நண்பர்களிற்கும் இத்தருணத்தில் எனது
மனம் நிறைந்த நன்றிகளை பேருவகையுடன் பதிவு செய்கிறேன்.
தமிழர்களின் தாகம் வடக்கு கிழக்கு இணைந்த தாயகம்.
என்றும் உங்கள்
இ.சாள்ஸ் நிர்மலநாதன்
பாரளுமன்ற உறுப்பினர்
(வன்னி மாவட்டம்)
பாரளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் அவர்களின் நன்றி நவில் news
Reviewed by Admin
on
August 20, 2015
Rating:

No comments:
Post a Comment