சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகியதால் பாரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது...
எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியதன் ஊடாக பாரிய அசம்பா விதமொன்று தடுக்கப்பட்டிருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு அமைவாகவும், நாட்டின் ஜனநாயகத்துக்கு மதிப்பளிக்கும் வகையிலும் எதிர்க்கட்சித் தலைவராக இரா.சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். எனினும் இதனை பலர் விமர்சித்து வருவதாக அவர் கூறினார்.
கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு கூறினார்.
இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து அரசாங்கம் அமைத்திருக்கும் நிலையில் மூன்றாவது கூடுதல் ஆசனங்களைக் கொண்ட கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே எதிர்க்கட்சி வழங்கப்பட வேண்டும் என்பது தெளிவாகின்றது.
இதனையும் வழங்காமல் இருந்திருந்தால், பாராளுமன்றம் தமது உரிமைகளை வெல்லக்கூடிய இடம் இல்லை, எனவே தமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேறொரு பாராளுமன்றத்தை அமைக்க வேண்டும் என்ற தர்க்கத்தை அவர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் முன்னெடுப்பதற்கான நல்லதொரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தியிருக்கும்.
இதனால் ஏற்படக்கூடிய அழிவுகுறித்த பக்கத்தில் சிந்தித்தாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு நிச்சயமாக எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும்.
இருந்தபோதும், பாராளுமன்ற சம்பிரதாயத்துக்கு அமைவாகவும், நாட்டின் ஜனநாயகத்துக்கும் மதிப்பளிக்கும் வகையிலும் இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட்டிருப்பதாக அவர் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியமை தொடர்பில் சிலர் குழப்பமடைகின்றனர். அவர்கள் குழப்பம் அடையத் தேவை யில்லை. அவர்கள் நாட்டின் மீது பற் றுள்ள தேசப்பற்றாளர்களாயின் ஐ.ம.சு.மு முழுமையான எதிர்க்கட்சியில் அமர வேண்டும்.
அவ்வாறு அமர்ந்தால் அவர் களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கலாம். நாட்டுப் பற்றைவிட அவர்களுக்கு அமைச்சுக்கள் மீதான பற்றே அதிகமாக உள்ளது என்றும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
ஐ.தே.கவுடன் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைப்பதற்கு ஐ.ம.சு.முவுக்கு மக்கள் கடந்த பொதுத் தேர்தலில் ஆணை வழங்கவில்லை. மக்கள் வழங்கிய ஆணையை மீறியே ஐ.ம.சு.மு செயற்படுகிறது.
தேசிய அரசாங்கம் அமைப்பதாக ஐ.தே.க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறியிருந்தாலும், ஐ.ம.சு.மு தனித்து அரசாங்கம் அமைப்பதாகக் கூறிவிட்டு தற்பொழுது தேசிய அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதேநேரம், அமைச்சுக்களின் எண்ணிக் கையை அதிகரிப்பதற்கு எடுத்திருக்கும் நடவடிக்கை அரசியலமைப்பை மதிக்காமல் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.
சம்பந்தன் எதிர்க்கட்சி தலைவராகியதால் பாரிய அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது...
Reviewed by Author
on
September 06, 2015
Rating:

No comments:
Post a Comment