அண்மைய செய்திகள்

recent
-

தமிழினத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் வரலாற்று நிகழ்வொன்றில் கூட்டமைப்பு பிரதி நிதிகள் தனித்தனியான பயணம் மேற்கொண்டமை ஏற்றுக்கொள்ளக்கூடிய விடையமில்லை-முன்னாள் எம்.பி எஸ்.வினோ


இலங்கையின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையினால் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யுத்த பேரவலத்தால் பாதிக்கப்பட்ட தமிழருக்கு சந்தேகங்களையும், ஏமாற்றத்தையும் தருவது போல் இப்பிரேரணை மீது ஒத்த கருத்தில்லாத தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்களின் நிலைப்பாடும் எமக்கு வேதனையை தருகின்றதாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோ நோகராதலிங்கம் தெரிவித்துள்ளார்.

இவ்விடையம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,,,

தமிழ் மக்களின் எண்ணங்களையும், உணர்வுகளையும் பிரதிபலிக்கக்கூடிய நிலைப்பாட்டினை ஒன்று கூடி, ஒருமித்து எடுத்த பின்னர் ஜெனிவா செல்லும் குழு கட்சியின் தலைமையினால் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும்.

தத்தமது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளும், இதர கட்சிகளும், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்களும் ஒட்டு மொத்த தமிழினத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் வரலாற்று நிகழ்வொன்றில் தனித்தனியான பயணம் மேற்கொண்டமை ஏற்றுக்கொள்ளக்கூடியதல்ல.

கட்சிகளின் உறுப்பினர்களை கட்டுப்படுத்தும் தகைமை கட்சித் தலைவர்களிடமும், கூட்டமைப்பின் தலைமையிடமும் இல்லாத குறையை ஜெனிவா விஜயத்தில் காணக்கூடியதாக இருக்கின்றது.

இப்பிரேரணை சம்பந்தமாக தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமல்லாது தமிழ் கட்சித் தலைமைகளிடமும் குழப்பமும், தெளிவின்மையும் இருக்கின்றதை நாம் மறுக்க முடியாது.

எமது மக்களுக்கு தெளிவான ஒரு விளக்கத்தை கொடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் கூட்டமைப்புக்கு உண்டு.

ஜனநாயக ரீதியில் தேர்தல்கள் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்ட கட்சியொன்று அந்த மக்களுக்கு பதிலளிக்கும் கடமைப்பாட்டையும் கொண்டுள்ளதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

இன்று பல விமர்சனங்கள் எழுகின்றன. இவை தீர்க்கப்பட வேண்டும். ஜெனிவா செல்லும் முன்னர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டப்பட்டிருக்க வேண்டும்.

பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் ஏகோபித்த முடிவுகள் எட்டப்பட்டிருக்க வேண்டும். கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளின் தலைவர்கள் கூடி பேசியிருக்க வேண்டும்.

இதில் எதுவுமே நடைபெறாமல் கூட்டமைப்பு ஒத்த கருத்தோடு ஜெனீவாவுக்கு செல்ல முடியும். எல்லோரும் அணி பிரிந்து தனித்தனியாகவே பயணம் செய்தார்கள்.

கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழு என்றால் யாருடைய தலைமையில் சென்றார்கள். எல்லாம் முடிந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுவிட்டது.

அடுத்து என்ன செய்வது என்பதையாவது ஒன்றாக கூடி பேசமுடியுமா. ஜெனிவாவிலிருந்து எமது தலைவர்கள் பிரதிநிதிகள் நாடு திரும்பியவுடன் அடுத்த கட்ட நிலைப்பாட்டையாவது எமது மக்களுக்கு எடுத்து சொல்ல வேண்டும்.

கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் அனைவரும் ஒன்றாக, ஒருமித்து கட்சியின் நிலைப்பாட்டை அறிவிக்க வேண்டும். எமது மக்கள் கூட்டமைப்பின் தலைவர்களிடம் எதிர்பார்க்கிறார்கள். எது எப்படி இருப்பினும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு எந்தச் சந்தர்ப்பத்திலும் துரோகம் செய்யாது என்பது புரிந்துகொள்ளக் கூடியதாக இருப்பினும் விமர்சனங்களை ஏற்றுக்கொள்வதும், பரிகாரம் காண்பதும் தலைமையின் பொறுப்பாகும்.

ஜெனிவா பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை தொடர்பாக வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கத்திடம் கேட்ட போதே அவர் தனது கவலையை இவ்வாறு வெளியிட்டார்.
தமிழினத்தின் தலைவிதியை தீர்மானிக்கும் வரலாற்று நிகழ்வொன்றில் கூட்டமைப்பு பிரதி நிதிகள் தனித்தனியான பயணம் மேற்கொண்டமை ஏற்றுக்கொள்ளக்கூடிய விடையமில்லை-முன்னாள் எம்.பி எஸ்.வினோ Reviewed by NEWMANNAR on October 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.