"எவன்ட்;கார்ட்" ஆயுதக் கப்பலை கைப்பற்றுமாறு கடற்படை அறிவிப்பு...
காலி பொலிஸார் ஊடாக பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு
காலி துறைமுகத்துக்கு அண்மித்த பகுதியில் இலங்கை கடற்பரப்புக்குள் பிரவேசித்த அவன்கார்ட் என்ற ஆயுதக் கப்பல் சந்தேகத்துக்கு இடமாக உள்ளதால் அதனை கைப்பற்றுமாறு கடற்படையினர் காலி துறைமுகப் பொலிஸ் ஊடாக பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்துள்ளனர்.
ஆயுதக் கப்பலை கைப்பற்றி இது தொடர்பாக முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் தென்பிராந்தியத்துக்குப் பொறுப்பான கடற்படையின் பிரதி கொமாண்டர் என்.ஹீநெட்டிகல இந்த முறைப்பாட்டை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் ஊடாகக் கிடைத்த பணிப்புரைக்கு அமையவே இந்த முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அதேநேரம், ரக்னா ஆரக்ஷக லங்கா நிறுவனத்தை தொடர்ந்தும் இயங்கச் செய்வதா இல்லையா என்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெகு விரைவில் ஆராய்ந்து தீர்மானம் மேற்கொள்ளவுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன தெரிவித்தார்.
மேற்படி விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ஆராய்ந்து வருவதாக தெரிவித்த அவர், இது தொடர்பிலான இறுதி முடிவை ஜனாதிபதியே மேற்கொள்ளவுள்ளார் என்றார்.
ஆரம்பிக்கப்பட்ட நோக்கத்துடன் ரக்னா ஆரக்ஷக லங்கா நிறுவனம் செயற்படுகிறதா என்பது தொடர்பிலும் ஆராயப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, அவன்கார்ட் நிறுவனத் திற்கு சொந்தமானது என காலி கடற் பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட கப்பல் தொடர்பிலும் விரிவான விசாரணைகள் முன்னெடுக் கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கைப்பற்றப்பட்ட மேற்படி கப்பல் தொடர்பில் இலங்கை கடற் படையின ரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை பாதுகாப்பு அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக தெரிவித்த அமைச்சர், குறித்த கப்பல் தொடர்பில் பல்வேறு மாறுபட்ட தகவல்கள் காணப்படுகின்றன என்றார்.
இலங்கையின் தேசியக் கொடியை பறக்கவிட்ட நிலையில் கப்பல் வந்துள்ள போதிலும் அந்தக் கப்பல் தொடர்பில் சரியான தகவல்கள் எதுவும் சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படவில்லை.
இலங்கை ஒருவர் கப்பல் கெப்டனாக செயற்படுவதாக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும் உக்ரைன் நாட்டவர் ஒருவரே அதில் இருந்துள்ளார். கப்பல் ஏன் காலி கடல் பரப்பிற்கு வருகை தந்துள்ளது. என்று கோரிய போது (சீமார்ஷல்) கடல் வழி பாதுகாப்பு நடவடிக்கைக்காக வருகை தந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவ்வாறு வருவதாக இருந்தாலும் உரிய அனுமதி பெற்றுக்கொள்ளப் படவில்லை.
அத்துடன் கப்பலில் ஆயுதம் எதுவும் உள்ளனவா என்று சோதனையின் போது கேட்கப்பட்டபோதும் இல்லை என்று கூறியுள்ளனர். என்றாலும் மறைத்து வைக்கப்பட்டிருந்த 800 ஆயுதங்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர் இது போன்ற முரண்பாடுகள் பல காணப்படுகின்றன என்றார்.
எனவே விசாரணைகளுக்கு பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
"எவன்ட்;கார்ட்" ஆயுதக் கப்பலை கைப்பற்றுமாறு கடற்படை அறிவிப்பு...
Reviewed by Author
on
October 14, 2015
Rating:
Reviewed by Author
on
October 14, 2015
Rating:


No comments:
Post a Comment