அமைச்சர் மனோவுடன் இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் சந்திப்பு,,,
தேசிய கலந்துரையாடல் அமைச்சர் மனோ கணேசனை, இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் ஷெலி வைடிங் சந்தித்து உரையாடியுள்ளார்.
இராஜகிரியவில் அமைந்துள்ள தேசிய கலந்துரையாடல் அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், கனடிய உயர் ஸ்தானிக அரசியல்துறை பொறுப்பாளர் ஜெனிபர் ஹார்ட், தேசிய கலந்துரையாடல் அமைச்சின் செயலாளர் பேர்ல் வீரசிங்க ஆகியோரும் கலந்துக்கொண்டனர்.
இந்த சந்திப்பு தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் தெரிவிக்கையில்,
இனங்களுக்கு இடையிலான சகவாழ்வை மேம்படுத்தும் எனது தேசிய கலந்துரையாடல் அமைச்சின் பொதுவான நடவடிக்கைகளுக்கும் குறிப்பாக தேசிய ஆட்சி மொழி கொள்கையை நடைமுறைபடுத்தும் செயற்பாடுகளுக்கும் கனடிய அரசாங்கத்தால் வழங்கப்படக்கூடிய உத்தேச ஒத்துழைப்புகள், உதவிகள், ஆலோசனைகள் பற்றி இந்த சந்திப்பின் போது உயர் ஸ்தானிகர் ஷெலி வைடிங் எடுத்து கூறினார்.
இதற்கு பதில் அளிக்கும் முகமாக, இந்த அமைச்சுக்கு கனேடிய அரசினால் கடந்த காலத்தில் வழங்கப்பட்ட ஒத்துழைப்புகள் மற்றும் உதவிகள் ஆகியவற்றுக்கு நான் நன்றி தெரிவித்தேன்.
முந்தைய ஆட்சிகளின் போதும் தமிழ் மொழியை சிங்கள மொழியுடன் இணைந்த சக ஆட்சி மொழியாக நடைமுறைபடுத்துவதற்கு அரச கரும மொழிக்கொள்கை, அரச கரும மொழி திணைக்களம், அரச கரும மொழி ஆணைக்குழு மற்றும் அமைச்சுடன் கூடிய அமைச்சரும் இருந்தும் தேவைப்பட்ட அரசியல் உறுதிப்பாடு இல்லாமல் இருந்தது.
இன்று அந்நிலைமை மாறியுள்ளது. என்னிடமும், எமது அரசாங்கத்திடமும் இது தொடர்பில் தேவையான அரசியல் உறுதிப்பாடு இன்று இருக்கின்றது. தற்போது ஒரு மாதமாகவே அமைச்சராக என் கடமைகள் ஆரம்பமாகியுள்ளன. இவைகளின் பலாபலன் விரைவில் நடைமுறையில் தெரிய வரும். கனடாவில் ஆங்கிலம், பிரெஞ்சு மொழிகளுக்கு நடைமுறையில் வழங்கப்பட்டுள்ள சம அந்தஸ்த்துடன் கூடிய சமகால வரலாறு எங்களுக்கு பெரிதும் வழிகாட்டுகிறது.
அரசாங்கத்தின் மொழியுரிமை கொள்கையை நடைமுறை படுத்துவது தொடர்பில் கனேடிய அரசின் கடந்த கால ஒத்துழைப்புகள் மற்றும் உதவிகள் மேலும் அதிகரித்த அளவில் எமது அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டும் என நான் கேட்டுக்கொண்டேன் என அவர் தெரிவித்தார்.
அமைச்சர் மனோவுடன் இலங்கைக்கான கனடிய உயர் ஸ்தானிகர் சந்திப்பு,,,
Reviewed by Author
on
October 28, 2015
Rating:

No comments:
Post a Comment