கூலிக்கு அமர்த்தப்பட்ட இலங்கை சினைப்பர் வீரர்.....
மாலைதீவின் ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீன் அப்துல் கையூமை கொலை செய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் கூலிக்கு அமர்த்தப்பட்டவரே அந்நாட்டின் தலைநகரில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கை சினைப்பர் வீரர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மாலைதீவு பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளதுடன் அந் நாட்டு பொலிஸார் இதனை உறுதி செய்துள்ளனர்.
இலங்கை ஸ்னைப்பர் வீரர் கைது செய்யப்பட்டதை முதன் முதலாக உறுதிப்படுத்தியுள்ள மாலைதீவு பொலிஸார் அவர் கடந்த ஒக்டோபர் மாதம் 24 ம் திகதி கைது செய்யப்பட்டதாகவும் விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் அவரை 15 நாட்கள் விளக்கமறியலில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் 27 வயதானவர் எனவும் எனினும் அவர் தொடர்பான மேலதிக தகவல்களை வெளிப்படுத்த முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் கைதான இலங்கை ஸ்னைப்பர் வீரருக்கு மேலதிகமாக அவருடன் தொடர்புபட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுத களஞ்சியமும் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் மேலும் பல களஞ்சியங்கள் இருக்கலாம் எனவும் அந் நாட்டு பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அண்மையில் இடம்பெற்ற மாலைதீவின் ஜனாதிபதி மீதான கொலை முயற்சி தொடர்பில் விசாரணை செய்யும் அந் நாட்டு பொலிஸ் குழு மேற்கொண்ட தேடுதலின் போது ஆயுத களஞ்சியசாலை ஒன்றும் கண்டுபிடிக்கப்பட்டதுடன் ஸ்னைபர் ரவைகளும் மீட்கப்பட்டன.
இதனையடுத்தே, இலங்கையைச் சேர்ந்த முன்னாள் இராணுவ ஸ்னைப்பர் படைப் பிரிவின் வீரர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார்.
மாலைத்தீவு ஜனாதிபதியை கொலைச் செய்ய முயன்றதாகக் கூறி அந் நாட்டின் துணை ஜனாதிபதி உள்ளிட்ட 8 பேர் அந் நாட்டு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன் பாதுகாப்பு அமைச்சரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந் நிலையில் இந்த சம்பவம் தொடர்பில் அமெரிக்காவின் புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ. யின் கீழ் இலங்கை, இந்தியா, சவூதி அரேபியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் சிறப்பு புலனாய்வாளர்களினால் விசாரணைகள் இடம்பெற்றன.
கூலிக்கு அமர்த்தப்பட்ட இலங்கை சினைப்பர் வீரர்.....
Reviewed by Author
on
November 09, 2015
Rating:

No comments:
Post a Comment