மன்னாரில் உணர்வு பூர்வமாக மாவீரர் தினம் அனுஸ்ரிப்பு-Photos
தமிழ் ஈழ விடுதலைப்போராட்டத்திற்காக தமது உயிரை தியாகம் செய்த மாவீரர்களை நீனைவு கூறும் வகையில் மன்னாரில் இன்று(27) வெள்ளிக்கிழமை மாலை 6.5 மணியளவில் ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு உயிர் நீத்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் மன்னார் எழுத்தூர் பகுதியில் குறித்த அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது மாலை 6.5 மணியளவில் சுடர் ஏற்றப்பட்டு தமிழ் ஈழ விடுதலைப்போராட்டத்திற்காக தமது உயிரை தியாகம் செய்ய மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்தோடு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி நேற்று(26) வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தின் தன் உயிரை தியாகம் செய்த பாடசாலை மாணவன் செந்தூரனுக்கும் விசேட விதமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத்தொடர்ந்து எழுத்தூர் ஆலயத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.
குறித்த அஞ்சலி நிகழ்வில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இ.செபமாலை அடிகளார்,வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன்,வடமாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.பிரிமூஸ் சிறாய்வா,மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க்,மன்னார் நகர சபையின் முன்னாள் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்,மன்னார் நகர சபையின் முன்னாள் உறுப்பினர்களான இரட்னசிங்கம் குமரேஸ்,மெரினஸ் பெரேரா,சமூக ஆர்வலர்கள்,கிராம மக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதே வேளை தமிழ் ஈழ விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூர்ந்து வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன் மன்னாரில் உள்ள தனது இல்லத்தின் முன் ஈகைச்சுடர் ஏற்றி தனது குடும்பத்துடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மாலை 6.5 மணியளவில் தனது வீட்டிற்கு முன் குடும்பத்துடன் இணைந்து ஈகைச்சுடர் ஏற்றி உயிர் நீத்த மாவீரர்களுக்கு அக வணக்கம் செலுத்தியுள்ளனர்.
மன்னாரில் உணர்வு பூர்வமாக மாவீரர் தினம் அனுஸ்ரிப்பு-Photos
Reviewed by NEWMANNAR
on
November 27, 2015
Rating:
No comments:
Post a Comment