அண்மைய செய்திகள்

recent
-

டிசம்பர் 16ல் பூமி என்னாகும்?


உண்மை காலில் செருப்பு போடுவதற்குள் பொய் ஒருமுறை உலகை சுற்றி வந்துவிடும் என்பார்கள் வதந்திகளைப் பற்றி. இப்படி மனதில் பீதியை கிளப்பும் இரண்டு செய்திகள் வாட்ஸ்-அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் தற்போது அதிவேகமாக பரவிக்கொண்டிருகிறது.

சென்னையில் பெய்து வருவது வெறும் மழை அல்ல. NASA ரிப்போர்ட் படி இதோட பெயர் 'EL Nino' சுழற்சி புயல்.

கிட்டதட்ட 250 Cm வரைக்கும் இந்த மழை பெய்ய வாய்ப்பு உண்டு. சென்னையே மூழ்கிப்போக வாய்ப்பு உண்டு. google ல Search பண்ணி பாருங்க தெரியும். எப்படியாவது நம் சென்னை மக்களுக்கு தெரியப்படுத்துங்க...

PLZ... அரசாங்கம் இத பொருட்டா எடுத்துக்கல” - இது முதல் வதந்தி.

டிசம்பர் 16 முதல் 22 வரை சூரிய புயலால் நாம் சூரியனை பார்ப்பது கடினம்... பூமி இருளில் முழ்கும் - நாசா அறிவிப்பு. - இது இரண்டாவது வதந்தி.

இந்த 2 வதந்'தீ' கள் பற்றி தமிழ்நாடு அறிவியல் இயக்கம் விளக்கம் அளித்துள்ளது.

இந்த இயக்கத்தை சேர்ந்த விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் இதுபற்றிய உண்மை நிலையை தெளிவுபடுத்தியுள்ளார்.

”உண்மையில், 'எல் நினோ' என்பது தென் அமெரிக்கா பசுபிக் கடற்பகுதியில் ஏற்படும் வானிலை மாற்றம். பசுபிக் கடல் சற்றே சூடு அதிகமாகி அதன் காரணமாக தென் அமெரிக்கா, கலிபோர்னியா முதலிய இடங்களில் மழை பொழிவு ஏற்படும். 'எல் நினோ' உலக வானிலையில் தாக்கம் ஏற்படுத்தும் என்பதால் செயற்கை கோள்வழி அதனை கண்காணிக்க நாசா ஏற்பாடு செய்துள்ளது.

'எல் நினோ' தீவிரம் அடையும் ஆண்டுகளில் வங்காள விரிகுடாவின் கடல் நீர் வெப்பம் சற்றே உயரும். அதன் காரணமாக கூடுதல் நீராவி உயர்ந்து மழை கூடுதலாகும்.

1997 ல் உருவான தீவிர 'எல் நினோ' போல இந்த ஆண்டும் தீவிரம் அடைந்து வருகிறது என நாசா வானிலை செயற்கைக் கோள்கள் கண்டுள்ளன.

இந்த ஆண்டும் இதன் தொடர்ச்சியாக 1997 ல் நிகழ்ந்ததுபோல அமெரிக்கா பகுதிகளில் பெரு மழை பொழியும் என்றும், வரும் 2016- ம் ஆண்டு, சராசரிக்கும் கூடுதலான வெப்பம் கொண்ட ஆண்டாக இருக்கும் எனவும் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

 'எல் நினோ' ஒரு புயல் அல்ல; சென்னையை நோக்கி வராது; சென்னை அல்லது தமிழகம் குறித்து நாசா எந்த ஒரு முன்னறிவிப்பையும் வெளியிடவில்லை. இதுவே நிஜம்.

இரண்டாவது வதந்தி, Huzlers.com எனும் வலைத்தளம் விஷமத்தனமாக வேடிக்கை காட்ட பரப்பிய செய்தி. இந்த போலியான செய்தி காட்டுத் தீ போல பரவி உலகெங்கும் பீதியை கிளப்பியிருக்கிறது.

உண்மையில், சூரிய (காந்த) புயல் அவ்வப்போது ஏற்படும் என்பது உண்மைதான். இந்த காந்தப் புயல் பூமியை வந்து மோதும்போது விண்வெளியில் சுற்றும் செயற்கை கோள்களின் தகவல் தொடர்பு முதலியவை பாதிக்கப்படும்.

மிக தீவிர காந்த புயல் வீசினால் ஐரோப்பா முதலிய பகுதிகளில் குறிப்பாக துருவத்துக்கு அருகில் உள்ள பகுதிகளில் மின்தொகுப்பு கருவிகள் (ட்ரான்ஸ்பார்மர்கள்) செயலிழந்து ஐரோப்பிய நகரங்கள் இருளில் மூழ்கலாம் அவ்வளவுதான்.

மின்சாரம் தடைபடுவதால் மின்விளக்குகள் எரியாது. இதைத்தான் 'உலகமே இருன்று விடும்' என இணைய தளங்களில் பரப்பிவருகிறார்கள் விபரமறியாத விஷமிகள். நிஜத்தில் உலகே பல நாட்கள் இருண்டு விடாது.

இதனால் உலகைப்பற்றியோ சென்னையைப்பற்றியோ யாரும் எந்த பதற்றத்திற்கும் உள்ளாகவேண்டாம்.

பரபரப்புக்கும் ஒருவித சுவாரஸ்யத்திற்கும் இப்படி செய்திகளை பரப்புபவர்கள் தாங்கள் மக்கள் மனதில் எத்தகைய பீதியை உண்டாக்குகிறோம் என்பதை உணர்வதில்லை” என்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன்.





டிசம்பர் 16ல் பூமி என்னாகும்? Reviewed by Author on December 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.