சிரியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் மும்மடங்காக உயர்வு: ஐ.நா
சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் எண்ணிக்கை மும்மடங்காக உயர்ந்துள்ளதாக ஐ.நா. அறிவித்துள்ளது.
ஐ.நா வெளியிட்ட அறிக்கையில், தற்போது 83.4 சதவிகித சிரிய மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்வது தெரியவந்துள்ளது.
2010ம் ஆண்டு, சிரியாவில் 28 சதவிகித மக்களே வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்ந்து வந்துள்ளனர்.
இந்த அறிக்கையின் படி, 2015ம் ஆண்டில் சுமார் 13.5 மில்லியன் மக்களுக்கு மனிதாபிமான உதவி தேவைப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும், 2010ம் ஆண்டு 70 வயதாக இருந்த ஆயுட்காலம், 2014-ல் 55.4 ஆக குறைந்துள்ளது. 2010ம் கணக்குப்படி சிரியாவில் இருந்த 493 மருத்துவமனைகளில் தற்போது பாதிக்கும் மேல் போரில் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவர்கள் மீதும் மருந்தகங்கள் மீதும் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதால், பலர் சிரியாவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இதனால் 2010-ல் 661 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற நிலையில் இருந்து 2015ம் ஆண்டில் 1442 பேருக்கு ஒரு மருத்துவர் என்ற அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சிரியாவில் தற்போது சுமார் 12.1 மில்லியன் மக்கள் தண்ணீர் வசதி, சுகாதார வசதி, கழிவிட வசதி போன்றவை இல்லாமல கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
சிரியாவில் உள்ள வீடுகள் மற்றும் உள்கட்டமைப்பு சேதாரத்தின் தொகை 90 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பள்ளி செல்ல வேண்டிய வயதில் உள்ள சிரிய குழந்தைகள் சுமார் 2.7 மில்லியன் பேரின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது.
2010-2015 காலகட்டத்தில் பொருளாதாரம் மேலும் 32 சதவிகிதம் உயரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது 55 சதவிகிதமாக சுருங்கியுள்ளது.
போரினால் உள்நாட்டு உற்பத்தி பாதிக்கப்பட்டதால், தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிப்படைந்தது. அதன் விளைவு, உணவின் விலையும் பெருமளவு உயர்ந்துள்ளது.
கோதுமை மாவின் விலை 43 சதவிகிதமும், அரிசியின் விலை 89 சதவிகிதமும் அதிகரித்துள்ளது என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிரியா 2011ம் ஆண்டு முதல் தொடங்கிய அரசுக்கு எதிரான போரில் சுமார் 2,70,000 பேர் கொல்லப்பட்டதுடன், பல மில்லியன் மக்கள் சிரியாவைவிட்டு வெளியேறியுள்ளனர்.
சிரியாவில் வறுமைக்கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் மும்மடங்காக உயர்வு: ஐ.நா
Reviewed by Author
on
May 01, 2016
Rating:

No comments:
Post a Comment