மட்டு. போதனா வைத்தியசாலையில் இரத்தப்பற்றாக்குறை : டாக்டர் விவேக்....
மட்டக்களப்பு வைத்தியாலையில் இரத்த தட்டுப்பாட்டினை இயலுமானவரையில் குறைத்துக்கொண்டு சென்றாலும் இரத்தத்தின் தேவை முன்பை விட அதிகளவில் அதிகரித்துச்செல்லும் நிலையிலேயே உள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியாலையின் இரத்த வங்கி பொறுப்பு வைத்திய அதிகாரி டாக்டர் கே.விவேக் தெரிவித்தார்.
இலங்கையின் முதல் பாடசாலை என்ற பெருமையினைக்கொண்ட மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடாத்தப்பட்டது.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 2005 ஆண்டு உயர்தரப்பிரிவு மாணவர்களின் ஏற்பாட்டில் பழைய மாணவர் சங்கம் ஊடாக இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.
Go to Videos
Batticaloa Methodist Central College Blood Donation Camp
கல்லூரியின் அதிபர் ஏ.டி.விமல்ராஜ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் அதிதியாக கலந்துகொண்டு இரத்ததானம் செய்தார்.
இந்த நிகழ்வில் பழைய மாணவர் சங்க தலைவர் சசி உட்பட பழைய மாணவர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டு இரத்ததானம் செய்தனர்.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 200வது ஆண்டை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இரத்ததான முகாம் மூன்றாவது ஆண்டாகவும் இன்று நடைபெற்றது விசேட அம்சமாகும்.
இந்த இரத்ததான முகாமில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு இரத்தம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.இங்கு தொடர்ந்து உரையாற்றிய டாக்டர் விவேக்,
மட்டக்களப்பு வைத்தியாலையில் இரத்த தட்டுப்பாட்டினை இயலுமானவரையில் குறைத்துக்கொண்டுசென்றாலும் இரத்தத்தின் தேவை முன்பைவிட அதிகளவில் அதிகரித்துச்செல்லும் நிலையிலேயே உள்ளது.
எதிர்பாக்கும் தேவையினை விட மிகவும் அதிகளவில் பற்றாக்குறை நிலவி வருகின்றது.புற்றுநோய் தனி பிரிவு திறக்கப்பட்டுள்ளதுடன் விசேட வைத்திய நிபுணர்கள் பலர் வருகைதந்துள்ள நிலையில் இரத்த பாவனை அதிகமாகவுள்ள நிலையில் மட்டக்களப்பு இரத்தவங்கி பல்வேறு கஸ்டங்களை எதிர்நோக்கியுள்ளது.
இன்று இரத்ததானம் செய்யும் நிலையில் இந்த இரத்தம் தமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் பலர் இன்று வைத்தியசாலையில் காத்திருக்கின்றனர்.
நீங்கள் எதிர்பார்ப்பதை விட மிகவும் மேலான பணியை இங்கு நீங்கள் ஆற்றுகின்றீர்கள்.தலசீமியாவினால் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவன் மூன்று தினங்களாக வைத்தியசாலைக்கு வந்துசெல்கின்றார்.
அவருக்கு இரத்தம் வழங்க இரத்தம் இல்லாத நிலையிலேயே அவர் வந்துசெல்கின்றார். அவர் மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பத்தினை நடாத்துபவர். அவருக்கு தலசீமியா நோய் உள்ளதை அவர் பணியாற்றும் நிறுவனத்துக்கு தெரிவிக்காமலேயே இருந்துவருகின்றார்.
அவர் அந்த நோய் இருப்பதை கூறினால் அவரின் தொழில் இல்லாமல்போகும் என்பதுடன் அவரின் குடும்பமும் பாதிக்கப்படும் நிலையிருந்துவருகின்றது.
அந்த இளைஞன் உயிர்வாழ்வதற்கே நீங்கள் இரத்தம் வழங்கி உதவிசெய்கின்றீர்கள்.இவ்வாறு பலர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்.
நீங்கள் என்ன தானம் செய்தாலும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி செய்யும் இரத்ததானமே சிறந்த தானமாகவும் உயர்ந்த தானமாகவும் நான் கருதுகின்றேன் என்றார்.
மட்டு. போதனா வைத்தியசாலையில் இரத்தப்பற்றாக்குறை : டாக்டர் விவேக்....
Reviewed by Author
on
June 13, 2016
Rating:

No comments:
Post a Comment