இலங்கை பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளுக்கு சர்வதேச பங்களிப்பு அவசியம்! ஐரோப்பிய ஒன்றியம்....
யுத்தக்குற்றச்சாட்டு தொடர்பான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளின் போது இலங்கை, சர்வதேச பங்களிப்பை பெற்றுக்கொள்ளுதல் அவசியம் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது அமர்வில் இன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதியாக பங்கேற்ற நெதர்லாந்தின் தூதுவர் மற்றும் வதிவிடப்பிரதிநிதி, ரோடரிக் வென் செக்ரீவன் (Roderick Van Schreven) இந்த வலியுறுத்தலை விடுத்தார்.
நீண்ட நடவடிக்கை ஒன்றுக்கான நடைமுறையில் இலங்கை இன்னும் ஆரம்பக்கட்டத்திலேயே இருப்பதாக அவர் குறிப்பிட்டார்
இலங்கை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் ஏற்றுக்கொண்ட யோசனைகளை நிறைவேற்ற வேண்டும். இதில் நல்லிணக்கம்,நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன அடங்குகின்றன.
உண்மையை கண்டறியும் பொறிமுறையை அமைத்து பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு மீண்டும் வன்முறைகள் எழாத உறுதியுரையை வழங்கும்வகையில் செயற்படுவதற்கு சர்வதேச பங்களிப்பு அவசியமானது.
பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பணிப்புரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதி வலியுறுத்தினார்.
வடக்கு கிழக்கில் இயல்பு வாழ்கையை ஏற்படுத்தி சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தவேண்டும். இதற்காக இலங்கை அரசாங்கம் முனைப்புக்களை மேற்கொள்ள வேண்டும்.
அரசியல் கைதிகளை விடுவித்தல், படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகளை கட்டுப்படுத்தல், பொதுமக்கள் பணிகளில் இராணுவத்தினர் தலையிடுவதை நிறுத்துதல், காணிகளை அவர்களின் சொந்தக்காரர்களிடம் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடவேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியப்பிரதிநிதி மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கை பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளுக்கு சர்வதேச பங்களிப்பு அவசியம்! ஐரோப்பிய ஒன்றியம்....
Reviewed by Author
on
June 30, 2016
Rating:

No comments:
Post a Comment