அடுத்த இரு மாதங்களில் இலத்திரனியல் அடையாள அட்டை நடைமுறைக்கு?
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என இலங்கை அரசு அறிவித்துள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களில் இந்த திட்டத்தை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சரத் குமார தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த திட்டத்திற்காக 8 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி செலவிடப்படவுள்ளது. இதற்கான அங்கீகாரம் விரைவில் நாடாளுமன்றில் பெற்றுக்கொள்ளப்படும்.
புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள அடையாள அட்டையில், அனைத்து கைவிரல் அடையாளங்களையும் உள்ளடக்கிய உயிரியல் தகவல்கள் மற்றும் ஒளிப்படம் அடங்கி இருக்கும்,
65 வயது வரை ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இது புதுப்பிக்கப்படும் 65 வயதுக்குப் பின்னர் புதுப்பிக்கத் தேவையில்லை.
இந்த அடையாள அட்டை தொடர்பில் ஏதாவது மோசடிகள் ஏற்படின் 3மாதத்தில் இருந்து ஒரு வருடங்களுக்கு சிறைத்தண்டனையும் 5 இலட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
இந்த அடையாள அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விபரங்களும் பதிவு செய்யப்படும். எனினும் அது கட்டாயமானதல்ல.
இந்த தரவுகள், குடிவரவுத் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைக்கப்படும்.
இந்த அடையாள அட்டையில் உள்ள தரவுகள், அடையாள அட்டையின் உரிமையாளர் அல்லது நீதிமன்ற உத்தரவின் மூலம் கோரப்பட்டால் மட்டுமே வெளியிடப்படும்.
புதிய அடையாள அட்டைக்கு கிராம அதிகாரிகள் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதுதொடர்பாக பிரதேச செயலக அதிகாரிகளுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.
அடுத்த இரு மாதங்களில் இலத்திரனியல் அடையாள அட்டை நடைமுறைக்கு?
Reviewed by Author
on
June 20, 2016
Rating:

No comments:
Post a Comment