மன்னார் பேசாலை பற்றிமா மகா வித்தியாலய உயர்தர மாணவர் பிரியாவிடை நிகழ்வு ----முழுமையான படங்கள் இணைப்பு
மன்னார் பேசாலை பற்றிமா மகா வித்தியாலய உயர்தர மாணவர் ஒன்றியத்தின் பிரியாவிடை விருந்துபசார நிகழ்வு 14-07-2016 வியாழன் காலை 10:30 மணியளவில் கல்லூரியில் இடம்பெற்றது.
இப் பிரியாவிடை விருந்துபசார நிகழ்விற்கு கல்லூரி சமூகத்தினால் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் அழைக்கப்பட்டு கலந்துகொண்டார்.
நிகழ்வில் தனது உரையில், கல்லூரியின் அதிபரை பாராட்டியதோடு, நிகழ்வுகள் மிகவும் தரமானதாக இருப்பதாகவும், தற்போதைய மாணவர் சமூகம் சில காரியங்களில் தவறுகளை விடுவதாகவும், குறிப்பாக சில மாணவர்கள் ஆசான்களை மதிக்காமல் நடக்கும் தன்மை மாற்றப்படவேண்டும் என்றும்,
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் நீதியாக நடக்கின்ற ஆசான்கள் மாணவர்களது நன்மைக்கே அவர்களைத் தண்டிக்கின்றார்களே தவிர மாறாக அவர்களது சுயநலத்துக்காக ஒருபோதும் மாணவர்களைத் தண்டிப்பதில்லை என்பதை புரிந்துகொள்ளவேண்டும் என்றும்,
அத்தோடு மாணவர்களாகிய நீங்கள் எப்போதும் அதாவது நாம் வாழ்வில் எந்த உயர்மட்டத்திற்கு வந்தாலும் நமக்கு கற்பித்த ஆசான்களை மறக்க கூடாது என்றும், அவர்களுக்கு கொடுக்கவேண்டிய மரியாதையை எப்போதும் நாம் கொடுக்கவேண்டும் என்பதை மனதிலே இருத்திக்கொள்வதோடு, தற்போது பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் பெறுபேறுகள் வரும்போது நல்ல பெறுபேறுகளை பெற்றவர்கள் தலைக்கனம் அடைந்தவர்களாக நடக்காமலும், அதேவேளை குறைந்த பெறுபேறுகள் எடுப்பவர்கள் மனமுடைந்து விடாமல் ஒரு கதவு மூடப்பட்டால் மற்றய கதவுகள் உங்களுக்காக திறக்கப்படும் என்ற நம்பிக்கையோடு நடந்துகொள்ளுங்கள் என்ற அதிபரின் கூற்றை தாம் இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் நினைவூட்ட விரும்புவதாகவும்,
ஆகவே அந்தக் கருத்தையும் மனதிலே இருத்திக்கொண்டு பரீட்சையில் நல்ல பெறுபேறுகளைப்பெற மாணவர்களை வாழ்த்துவதாகவும் தெரிவித்ததோடு இந்த ஆண்டு உயர்தர பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் அனைத்துத் துறைகளிலும் முதலாவது இடத்தை பெறும் மாணவர்களது உயர் கல்விக்கு தான் உதவி செய்வேன் என்று தெரிவித்தார்,
இந்த சந்தர்ப்பத்தில் இவ்வாறான திட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு நடைமுறையில் இருப்பதும் கடந்த ஆண்டு மாவட்டத்தில் முதல் இடங்களைப் பெற்ற மாணவர்களுக்கு இந்த உதவித்திட்டம் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அத்தோடு தனது ஆசிரியரும் கல்லூரியின் அதிபருமான அருட் சகோதரர் ஸ்டனிஸ்லஸ் அவர்கள் தம்மிடம் வைத்துள்ள கோரிக்கையான பாடசாலைக்கு ஒரு ஓகன் வாங்குவதற்கான விண்ணப்பத்தை தாம் ஏற்றுக்கொள்வதாகவும், சுமார் 2 இலட்சம் பெறுமதியான தரமானதொரு இசைக்கருவி(ஓகன்) வாங்கித்தருவதாகவும் தெரிவித்தார் இந்தசந்தர்ப்பத்தில் கடந்த ஆண்டு தனது நிதி ஒதுக்கீட்டில் கல்லூரி மைதானத்தை புனரமைத்துக்கொடுத்தமையும் குறிப்பிடத்தக்கது.
அதே வேளை தானும் கல்லூரியின் அதிபரும் தன்னுடைய ஆசானுமான அருட் சகோதரருடன் பல தடவைகள் சமய ஒற்றுமைகள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும், அந்த வகையில் இன்றைய இந்த விழாவின் நிகழ்ச்சி நிரலை பார்த்து தான் மிகுந்த உவகை அடைந்ததாகவும் காரணம் பேசாலைக் கிராமம் கத்தோலிக்க கிராமமாக இருக்கின்ற போது இங்கே குறைவாக காணப்படும் மற்றைய சமயங்களை முன்னிலைப்படுத்தி, அதாவது முதலில் இஸ்லாமிய வழிபாடு, இரண்டாவதாக இந்துமத வழிபாடு, மூன்றாவதாக கத்தோலிக்க வழிபாடும் இடம்பெற்றது சமய ஒற்றுமையின் ஆரம்பம் எனத் தாம் கருதுவதாகவும, இதே போல மதங்களை வைத்து அரசியல் நடத்துபவர்களும், மதங்களை தூண்டிவிட்டு அதிலே இலாபம் தேடுபவர்களுக்கும் இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு எனவும் தெரிவித்ததோடு,
எதிர்கால எமது சமூகமான நீங்கள் ஒவ்வொருவரும் மதங்களை கொண்டு பிளவுகள் வராத வண்ணமாக சிறந்த எடுத்துக்காட்டுள்ள சமூகமாக திகழவேண்டும் என்று மாணவர்களிடம் கோரிக்கை விடுத்து விடைபெற்றார்...
இந்நிகழ்வில் மாணவமாணவிகளின் ஆடல் பாடல் கலைநிகழ்வுகளும் கண்ணுக்கு விருந்தாக கலந்து கொண்ட அருட்தந்தையர்கள் அருட்சகோதரிகள் ஆசிரியர்கள் அமைச்சர் கல்லூரி முதல்வர் ஆகியோர் ஆற்றிய அறிவுரைகள் மாணவர்களுக்கு நல்ல மருந்தாகவும் அமைந்தது நிகழ்வு இனிதே நிறைவுற்றது.
மன்னார் பேசாலை பற்றிமா மகா வித்தியாலய உயர்தர மாணவர் பிரியாவிடை நிகழ்வு ----முழுமையான படங்கள் இணைப்பு
Reviewed by Author
on
July 15, 2016
Rating:

No comments:
Post a Comment