தமிழ்த் தலைமைகளிடமும் பிரதேசவாதமா? வட மாகாண சபையில் கேள்வி!
யாழ்ப்பாணத்தில் வலிகாமம் வடக்கிலும், திருகோணமலையில் சம்பூரிலும் படையினர்வசம் உள்ள காணிகளை மக்களிடம் கொடுங்கள் என கேட்கும், தமிழ் தலைவர்கள் முல்லைத்தீவில் மக்களுடைய காணிகளை மக்களிடம் கொடுங்கள் என கேட்காதது ஏன்?
நல்லாட்சி அரசாங்கத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில்ஒரு அங்குலம் நிலமேனும் விடுவிக்கப்பட்டதா? எதற்காக இந்த பாரபட்சம் காட்டப்படுகின்றது என வடமாகாணசபை பிரதி அவை தலைவர் ம.அன்டனி ஜெயநாதன் தெரிவித்துள்ளார்.
வட மாகாண சபையின் 60ஆம் அமர்வு இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
மகாவலி அதிகாரசபை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மிக பாரதூரமானவை என்பதில் மாற்று கருத்தில்லை. ஆனால் இந்த விடயங்கள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் பேசுவதன் ஊடாகவே தீர்வினை காணலாம்.
மேலும் யாழ்ப்பாணம் வலி. வடக்கு மற்றும் திருகோணமலை - சம்பூர் பகுதிகளில் படையினர் வசம் உள்ள காணிகளை மக்களிடம் வழங்கவேண்டும் என தமிழ்த் தலைவர்கள் பேசுகின்றனர்.
அந்த பகுதிகளில் மக்களுடைய நிலம் சிறிது சிறிதாக மக்களிடம் மீளவும் வழங்கப்படுகின்றது. ஆனால் முல்லைத்தீவு மாவட்டம் உள்ளிட்ட வன்னி மாவட்டங்களில் மக்களுடைய நிலங்கள் மக்களிடம் வழங்கப்பட வேண்டும் என எவரும் பேசுவதாக இல்லை.
வலிகாமம் வடக்கிலும், சம்பூரிலும் மக்களுடைய காணிகளை விடுவது எங்களுக்கு மகிழ்ச்சியே. இந்த விடயத்தில் நாங்கள் பிரதேசவாதம் பேசவில்லை.
ஆனால் சம்பூர் குறித்தும் வலி.வடக்கு குறித்தும் பேசுவோர், எதற்காக முல்லைத்தீவு உள்ளிட்ட வன்னி மாவட்டங்கள் குறித்து பேசுவதில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தலைமைகளிடமும் பிரதேசவாதமா? வட மாகாண சபையில் கேள்வி!
Reviewed by Author
on
August 26, 2016
Rating:

No comments:
Post a Comment