மார்க் ஜனாத்தகன் எழுதிய "ஒரு வேள்வி ஆட்டின் விண்ணப்பம்" கவிதை நூல் வெளியீட்டு விழா-Photos
ஒரு வேள்வி ஆட்டின் விண்ணப்பம்"
- வெற்றிகரமாக விண்ணப்பிக்கப்பட்டது.
மார்க் ஜனாத்தகன் எழுதிய "ஒரு வேள்வி ஆட்டின் விண்ணப்பம்" கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
பி.ப 3.30 மணியளவில் மு/மல்லாவி மத்திய கல்லூரி மயில்வாகனம் மண்டபத்தில், கல்லூரி முதல்வர் திரு. து. யேசுதானந்தர் தலைமையில் விருந்தினர்களின் மங்கல விளக்கேற்றலுடன் வெளியீட்டு நிகழ்வு ஆரம்பமானது.
அகவணக்கத்தைத் தொடர்ந்து மு/மல்லாவி மத்திய கல்லூரி மாணவிகளால் தமிழ் மொழி வாழ்த்து இசைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இந்து மற்றும் கிறிஸ்தவ மதகுருமார்களால் ஆசிச்செய்திகள் வழங்கப்பட்டன. அதையடுத்து நிகழ்வின் தலைவர் அவர்களின் தலைமையுரை இடம்பெற்றதைத் தொடர்ந்து, நூலாசிரியர் மார்க் ஜனாத்தகன் அவர்கள் நிகழ்வில் நேரடியாக பங்கெடுக்க முடியாத நிலையிலும் புலம்பெயர் தேசத்திலிருந்து கானொளி வாயிலாக நிகழ்வில் கலந்துகொண்டோருடன் தன் எண்ண அலைகளை பகிர்ந்து சிறப்பித்தார்.
தொடர்ந்து வரவேற்புரையை மல்லாவிக் கஜன் அவர்கள் வழங்கியதையடுத்து வாழ்த்துரைகள்,சிறப்பு விருந்தினர் உரைகள் அரங்கம் கண்டன. அதன் வரிசையில் வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் மதிப்பார்ந்த திரு. வ.கமலேஸ்வரன், துணுக்காய் வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.பொ. ரவிச்சந்திரன், மு/முத்துஐயன்கட்டு ம.வி அதிபர் திரு. சி.நாகேந்திரராசா ஆகியோர் வழங்கியிருந்தனர்.
தொடர்ந்து நூல் வெளியீடு இடம்பெற்றது. விருந்தினர்கள் புடைசூழ, பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்த வடக்கு மாகாண கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத் துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் கெளரவ திரு. த. குருகுலராஜா அவர்கள் முதற்பிரதியை வெளியிட்டு வைக்க, அதனை வடக்கு மாகாண சபை அவைத் தலைவர் திரு.வ.கமலேஸ்வரன் அவர்கள் பெற்றுக் கொண்டார். தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கிக் கெளரவிக்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சித் தொகுப்பை மு/மாங்குளம் மகா வித்தியாலய ஆசிரியர் திரு. சு சுபநேசன் அவர்கள் தொகுத்தளித்திருந்தார்.
அதையடுத்து நூலாராய்வுரை இடம்பெற்றது. அதனை முல்லைத்தீவு வலயக்கல்வி அலுவலகத்தின் நிர்வாகப் பிரதிக்கல்விப் பணிப்பாளர் திரு. ஞா. ஆதவன் அவர்கள் செவ்வனே ஆற்றியமர, பிரதம விருந்தினர் உரையை கெளரவ அமைச்சர் திரு.த குருகுலராஜா அவர்கள் வழங்கினார். நிகழ்வில் பங்கெடுத்த விருந்தினர்களுக்கு நினைவுச் சின்னங்கள் நூலாசிரியரின் தாயாரினால் வழங்கிக் கெளரவிக்கப்பட்டது. நன்றியுரையை நூலாசிரியரின் அன்புத் தாயார் திருமதி. ஜெ.விஜயலட்சுமி அவர்கள் நிகழ்த்தினார்.
நிகழ்ச்சித் தொகுப்பை கவிஞர் வே. முல்லைத்தீபன் அவர்கள் திறம்பட அளித்திருந்ததுடன், ஈழத்துப் பிரபல பாடகர் S.G சாந்தன் அவர்களது புதல்வன் S.கோகுலன் அவர்களது பாடல் நிகழ்வில் பங்கெடுத்த பலரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்டிருந்தது.
காலநிலை சீரின்மையுயைம் பொருட்படுத்தாது நூலாசிரியரின் பல்கலைக்கழக தோழமைகள், சக நண்பர்கள், உறவுகளுடன் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள், கிராம சேவகர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், இலக்கிய ஆர்வலர்கள், துறைசார் தலைவர்கள் மற்றும் பலருமென நிறைந்த அவையில் மிகவும் சிறப்பான முறையில் நூல் வெளியீடு நிறைவுகண்டது.
●மல்லாவி மண்ணை பிறப்பிடமாகக் கொண்ட மார்க் ஜனாத்தகன் அவர்கள் தற்போது புலம்பெயர் நாட்டில் வசித்து வருவதுடன் இது அவருடைய கன்னிநூல் என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
பதிவு: கஜன்
மார்க் ஜனாத்தகன் எழுதிய "ஒரு வேள்வி ஆட்டின் விண்ணப்பம்" கவிதை நூல் வெளியீட்டு விழா-Photos
Reviewed by NEWMANNAR
on
November 19, 2016
Rating:
No comments:
Post a Comment