உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஜனவரி மாத நடுப்பகுதியில் வெளியிடப்பட உள்ளது...
கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் ஜனவரி மாத நடுப்பகுதியில் வெளியிடப்பட உள்ளது.
எதிர்வரும் மாதத்தின் இரண்டாம் வாரமளவில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யு.ஜே.எம். புஸ்பகுமார கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சையில் தொழில்நுட்பப் பிரிவில் 30000 மாணவ மாணவியர் தோற்றியிருந்தனர்.
இவர்களின் செய்முறை பரீட்சைக்காக மேலதிக நேரமொன்றை ஒதுக்க நேரிட்டிருந்தது. செய்முறைப் பரீட்சையின் புள்ளிகள் எழுத்துப் பரீட்சையின் புள்ளிகளுடன் சேர்க்கப்பட உள்ளது.
எழுத்துப் பரீட்சைக்கு 75 புள்ளிகளும் செய்முறைப் பரீட்சைக்கு 25 புள்ளிகளும் வழங்கப்பட உள்ளன. இம்முறை உயர்தரப் பரீட்சைக்காக மூன்று லட்சத்திற்கும் அதிகமான பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் ஜனவரி மாத நடுப்பகுதியில் வெளியிடப்பட உள்ளது...
Reviewed by Author
on
December 20, 2016
Rating:

No comments:
Post a Comment