வெற்றி கொள்ளமுடியாத தமிழீழம்..! மனம் திறந்த மைத்திரி
யுத்தம் முடிவிற்கு கொண்டு வரப்பட்ட பின்னர் எம்மால் தனி ஈழம், நாட்டை பிளவு படுத்துவது போன்ற கருத்துக்களை மட்டும் எம்மால் இன்று வரை வெற்றிகொள்ள முடியவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வரவுசெலவுத்திட்டத்தின் மீதான குழுநிலை விவாதம் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்திருக்கிறார்.
ஜனாதிபதியின் இந்த கூற்று உண்மையில் தமிழ் மக்களையும், அவர்கள் மனங்களில் இருக்கும் ஆசையையும் வெற்றி கொள்ளவில்லை என்பதை புலப்படுத்தி நிற்கின்றது.
கடந்த மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை இலங்கை அரசியல் வரலாற்றில் நீண்ட அனுபவங்களைக் கொண்டவர்.
தன்னுடைய பதவிக்காலத்தில் இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வினை எட்ட வேண்டும் என்பதை ஆட்சிப்பீடம் ஏறிய நாட்களில் இருந்து அடிக்கடிச் சொல்லிவருகின்றார். ஆனால், இனப்பிரச்சினை தீர்க்கப்படுவது என்பது சாதாரண விடையமன்று,
Go to Videos
President Maithripala Sirisena | Parliament Speech
தமிழ் மக்களுக்கு ஏதேனும் அதிகாரங்களைக் கொடுக்கலாம் என்று யாரேனும் நினைத்தால் அவர்கள் அதிகாரங்களை இழக்க நேரிடும் என்பதே வரலாறு.
அதனை சந்திரக்கா அம்மையாரும் நேற்றைய தினம் நடந்த நிகழ்வு ஒன்றின் போது வெளிப்படுத்தியிருக்கிறார்.
தன்னுடைய பதவிக்காலத்தில் இனப்பிரச்சினைக்கான அதிகாரங்களை பகிர்ந்து பிரச்சினைகளை தீர்க்கலாம் என்று பேசிய வேளை அன்றைய அமைச்சர்கள் சிலர் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டால், ஆட்சியை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என்று தன்னை எச்சரித்தாக குறிப்பிட்டிருந்தார்.
உண்மையில், தெற்கில் இனவாதம் என்னும் தீ கட்டியெழுப்பப்பட்டாலேயே தெற்கில் அதிகாரத்தினை அனுபவிக்க முடியலாம் என்பதை அவர் தெளிவாக உணர்த்தியிருக்கிறார்.
இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் பேசிய ஜனாதிபதியின் கூற்றின் வெளிப்பாடும் அதுவாகவே இருக்கின்றது.
தமிழ் மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்காததன் விளைவே தமிழீழம் என்பதை வெற்றி கொள்ள முடியாமல் இருக்கின்றோம் என்பது.
தமிழ் மக்களை தொடர்ந்து அடக்கி, அவர்களின் உரிமைகளை மறுக்கும் பொழுதெல்லாம் அவர்கள் தங்கள் சுதந்திரத்தையே நாடி நிற்பார்கள் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார்.
மேலும் நாடாளுமன்றத்தில் பேசிய ஜனாதிபதி, ஆரம்ப காலம் முதலாகவே இலங்கையர்களிடையே பிரச்சினைகள் காணப்பட்டு வந்தன. இதுவரை காலமும் நாட்டில் நடந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் எமக்கு சிரந்த பாடங்கள் தான்.
நாடு சுதந்திரம் அடைந்த நாட்களில் இருந்து இந்த நிமிடம் வரை பிரச்சினைக்குள் சிக்கித்தவித்துக் கொண்டே இருக்கின்றது.
இலங்கையில் நடந்த யுத்தத்தையும். அதன் பாதிப்புக்களையும் நேரடியாகப் பார்த்தவன் நான் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார்.
அதேவேளை, நாட்டில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் வளர்க்கப்பட்டால் அது இனச்சிக்கல்களை வெகுவாக குறைக்கும் என்றும் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.
மைத்திரிபால சிறிசேனவின் இன்றைய உரையானது அவரின் ஆள்மனதில் இருந்து வெளிவந்தது என்பதை தெளிவாக எடுத்துக்காட்டுகின்றது.
ஏனெனில், நாட்டில் நல்லிணக்கத்திற்கு தடையாக இன்று பல தரப்பினர் சூழ்ச்சியில் இறங்கியிருக்கிறார்கள்.
கூட்டு எதிர்க்கட்சியினரின் வெளிப்படையான பிரச்சாரங்கள் மீண்டும் நாட்டில் இரத்த ஆற்றை ஏற்படுத்தி விட்டுவிடுமோ என்ற அச்சத்தை அவர் மனதில் ஏற்படுத்தியிருக்கலாம்.
இனச்சிக்கல்களை தீர்த்து அடுத்த சந்ததியினரை நிம்மதியாக வாழை வைக்க வேண்டும் என்பதை தான் விரும்புவதாக ஆட்சி ஏற்ற நாட்களில் இருந்து வெளிப்படுத்திவரும் ஜனாதிபதி அதற்கான முட்டுக்கட்டைகளையும் நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இதற்கிடையில் இன்றைய எதிர்க் கட்சித் தலைவரான இராஜவரோதயம் சம்பந்தன் தொடர்பில் கருத்துவெளியிட்ட ஜனாதிபதி,
பிரச்சினையை தீர்க்க எம்முடன் இணைந்து செயற்படும் ஓர் நல்ல தலைவராக சம்பந்தன் அவர்கள் இருந்து வருகின்றார் என்றும் குறிப்பிட்டதன் மூலமாக அனைவரையும் அரவணைத்து இலங்கையை இனப்பிரச்சினையின் பிடியில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றார்.
எதுவாயினும் இந்தப் பிரச்சினைகளை தீர்த்தால் அரசியல் செய்ய முடியாமல் போகும் என்பதனை நினைவில் வைத்திருக்கும் தென்னிலங்கை அரசியல் தரப்புக்கள் புதிய அரசியல் யாப்பு மறுசீரமைப்பில் தங்கள் இனவாதத்தை கொட்டுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.
வெற்றி கொள்ளமுடியாத தமிழீழம்..! மனம் திறந்த மைத்திரி
Reviewed by Author
on
December 02, 2016
Rating:

No comments:
Post a Comment