கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டம்,,,,,
கேப்பாப்பிலவு பிலக்குடியிருப்பிலுள்ள காணிகளை மீளப்பெற்றுத் தருமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமது பெற்றோர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால், அதற்கான பொறுப்பை அரசாங்கமே
ஏற்றுக்கொள்ள வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் பிள்ளைகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிள்ளைகள் பாடசாலைக்கு செல்லாது, பெற்றோர்களுடன் இணைந்து தாமும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.
விமானப் படையினரால் கடந்த எட்டு ஆண்டுகளாக கையகப்படுத்தப்பட்டுள்ள பிலவுக்குடியிருப்பு கிராமத்திலுள்ள 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 ஏக்கர் குடியிருப்பு காணிகளையும் விவசாய நிலங்களையும் விடுவிக்குமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 31ஆம் திகதி செவ்வாய்க்கிழமை தொடக்கம் இரவு பகலாக பிலவுக்குடியிருப்பு பகுதியிலுள்ள விமானப் படை முகாமிற்கு முன்னால் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் பிள்ளைகள் நேற்றும் பாடசாலை செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது
தமது பெற்றோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளமையினால் தாம் பாடசாலைக்கு செல்வதற்கு சிரமங்களை எதிர்நோக்குவதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த மாணவர்கள் பாடசாலை செல்வதற்கான ஒழுங்குகளை செய்து தருவதாக மாவட்ட சிறுவர் நன்னடத்தை அதிகாரி உறுதி வழங்கிய போதிலும், அதற்கான எந்த வொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மக்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, நேற்றைய தினத்திற்குள் தமக்கு உரிய தீர்வு வழங்கப்படாவிடின், தமது போராட்ட வடிவம் மாற்றமடையும் என அம்மக்கள் கூறியிருந்த நிலையில் காலஅவகாசம் வழங்கி,
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்படும் ஒத்தி வைப்பு விவாதத்தில் தம்மை ஏமாற்றாது நல்ல பதிலை கூட்டமைப்பு பெற்றுத் தரவேண்டும் எனவும் உரிய தீர்வு கிடைக்காவிட்டால் உயிரை மாய்த்துதான் போராட்டத்தை முடிக்க வேண்டுமெனில் அதுவே நடக்கும் எனவும் அம்மக்கள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை, பிலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டத்திற்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் நேரில் சென்று தமது ஆதரவினை வெளியிட்டுள்ளனர்.
வட மாகாண சபை உறுப்பினர்களான பசுபதிப்பிள்ளை, ரவிகரன் மற்றும் வட மாகாண போக்குவரத்து அமைச்சர் டெனீஸ்வரன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் நேரில் சென்று தமது ஆதரவினை வழங்கியிருந்தனர்.
இதனைவிட முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலை நிர்வாகத்தினர் வைத்திய பரிசோதனையை மேற்கொண்டதோடு கல்வி வலய அதிகாரிகள் சிலர் மாலை நேர கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்
இதனைவிட இப்போராட்டத்தில் கலந்துகொண்ட தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தினர் இவர்களுக்கு ஆதரவு வழங்கியதோடு இன்று நீர்கொழும்பில் இவர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நிகழ்த்தவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
கேப்பாப்பிலவு மக்கள் தொடர் போராட்டம்,,,,,
Reviewed by Author
on
February 08, 2017
Rating:
Reviewed by Author
on
February 08, 2017
Rating:


No comments:
Post a Comment