காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து அரசின் பதில் என்ன?
வவுனியாவில் இராணுவத்திடம் கையளிக்கப்பட்ட நிலையிலும் மற்றும் ஏனைய வழிகளாலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து தமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் முன்னெடுத் திருக்கும் சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை நேற்று திங்கட்கிழமை 25, ஆவது நாளாகவும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த போராட்டம், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும்
“அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும்\"“பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்” ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற்று வருகிறது.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாக கொழும்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவு கள் ஒன்றிணைந்து மீண்டும் தமது போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
ஜனாதிபதி, பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரில் ஒருவர் நேரில் வந்து சாதகமான பதில் வழங்கும் பட்சத்தில் மட்டுமே தமது போராட்டத்தை நிறுத்துவதாகவும், அதுவரை தமது உறவுகளைத் தேடிய போரா ட்டம் தொடரும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கவனயீர்ப்பு கண்டனப் போராட்டத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு தமது போராட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தி தபாலட்டைகளை அனுப்பி வைக்கும் முகமாக பொது மக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட தபாலட்டைகளை தினமும் 1000, தபாலட்டைகளை அனுப்பும் போராட்டத்தையும் சமகாலத்தில் முன்னெடுத்துள்ளனர்.
இதேவேளை, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கு ஆதரவாக வடக்கு கிழக்கு பெண்கள் வலையமைப்பு, அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், புதிய மாக்சிச லெனின் கட்சி, யாழ். பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாக மாணவர்கள், புகையிரத கடவை காப்பாளர் சங்கம் , இனம், மதம், மொழி வேறுபாடுகள் இன்றி பொது மக்கள் எனப் பலரும் இணைந்து தமது ஆதரவுகளை வழங்கி இப் போராட்டத்தில் கலந்து கொண்டு வருகின்றனர்.
காணாமல் ஆக்கப்பட்டோர் குறித்து அரசின் பதில் என்ன?
Reviewed by NEWMANNAR
on
March 21, 2017
Rating:

No comments:
Post a Comment