வடக்கில் தெரிவு செய்யப்பட்ட 40 பாடசாலைகளில் மக்கள் அரங்க செயற்திட்டம்
இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இலங்கை மக்கள் அரங்க செயற்திட்டமானது வட மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட 40 பாடசாலைகளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் குறித்த செயற்திட்டம், மன்னார், கிளிநொச்சி, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், சுமார் 14,000 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இத்திட்டம் சென்றடைந்துள்ளது. வயதுவந்தோர், சிறுவர்கள் மற்றும் இளைஞர்கள் (16 -19 வயதுடையோர்) ஆகியோருக்கு மத்தியில் அகிம்சைக் கலாச்சாரத்தினையும், சகிப்புத்தன்மை வேற்றுமைகளை ஏற்றுக்கொள்ளல், வேறுபாடுகளுக்கு மதிப்பளித்தல் சமத்துவம், நீதி, சமூகப் பிரச்சினைகளைக் கையாளுதல் வன்முறையற்ற விதத்தில் பிரச்சினைகளைத் தீர்த்து வைத்தல் போன்ற பன்மைத்துவ விழுமியங்களையும் ஊக்குவிப்பதை குறிக்கோளாகக் கொண்டுள்ளது.
இலங்கை அபிவிருத்தி ஊடகவியலாளர் மன்றமானது இந்த செயற்திட்டத்தை அமுல்படுத்தும் பொருட்டு வட மாகாண கல்வி அமைச்சு, மாகாண கல்வித் திணைக்களம் (வடக்கு), கட்புல மற்றும் அரங்கக் கலைகள் பல்கலைக்கழகம், யாழ். பல்கலைக்கழகம் மற்றும் தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றது.
இதன் அடிப்படையில் மக்கள் அரங்க செயற்திட்டத்திட்டத்திற்கான உத்தியோகபூர்வ கையேடு ஒன்று வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
வடக்கில் தெரிவு செய்யப்பட்ட 40 பாடசாலைகளில் மக்கள் அரங்க செயற்திட்டம்
Reviewed by Author
on
October 13, 2017
Rating:

No comments:
Post a Comment