தமிழர்கள், சலசலப்புக்கு அஞ்சி வெருண்டு ஓடும் சாதாரண நரிகளல்லர்!
முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரனும் பொதுஜன பெரமுன கட்சியின் பிரமுகருமான பசில் ராஜபக்ச தனது யாழ்ப்பாணப் பயணத்தின் ஒரு பகுதியாக நல்லை ஆதீன முதல்வரையும் யாழ். மாவட்ட ஆயரையும் நேரில் சந்தித்துப் பேசியுள்ளார். மகிந்த ராஜபக்சவும் பசில் ராஜபக்சவும் அதிகாரத்தில் இருந்த போது இவ்வாறு ஆதீன முதல்வரை அவரது இடத்துக்குச் சென்று சந்தித்துப் பேசியதற்கான சான்றாதாரங்கள் இல்லை என்றே கூறலாம்.
பதவியை இழந்த நிலையில், மகிந்த குடும்பத்தினர் ஊழல் மோசடிக் குற்றச்சாட்டுக்களின் கீழ் இலக்கு வைக்கப்பட்டுள்ள நிலையில் பசில் ராஜபக்ச நல்லை ஆதீனத்தைத் தேடி வந்திருப்பதை அரசியல் முக்கியத்துவம் இல்லாதது என்று புறந்தள்ளி விட முடியாது. பசில் - நல்லை ஆதீனகர்த்தா சந்திப்பு அத்தகைய ஒரு திட்டமிட்ட அரசியல் காய் நகர்த்தல் இல்லையென்றாலும் அதில் ஒழிந்திருக்கும் அரசியல் கூர்ந்து கவனிக்கப்பட்டு ஆய்ந்தறியப்பட வேண்டும். 2015ஆம் ஆண்டு தை மாதம் அரச தலைவர் தேர்தலில் தோல்வியடைந்து தனது ஊருக்குத் திரும்பிய மகிந்த ராஜபக்ச தமிழர்களாலேயே தான் தோற்கடிக்கப்பட்டார் என்று தனது ஆதரவாளர்கள் மத்தியில் பகிரங்கமாகவே தெரிவித்திருந்தார்.
அந்தப் படிப்பினையில் இருந்து மேற்கொள்ளப்படும் அரசியல் காய்நகர்த்தல் தானா நல்லை ஆதீன முதல்வருடனான சந்திப்பு என்பது நோக்கப்பட வேண்டும்.எதிர்கால அரசியலில் தமிழர்களைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என்கிற சமிக்ஞையை வெளிப்படுத்தும் ஒரு சந்தர்ப்பமாக பசில் இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தாரா என்பது நோக்கப்பட வேண்டும்.
புதிய அரசமைப்புத் தொடர்பான விடயத்தில் பௌத்த மதத்துக்கு வழங்கப்படும் முக்கியத்துவமும் அரச மதம் என்கிற மதிப்பும் விட்டுக் கொடுக்கப்பட முடியாதது என்று மகிந்த ராஜபக்ச விடாப்பிடியாக இறுக்கமாக நிற்கும் நிலையில் சீற்றம் கொள்ளும் தமிழ் மக்களை சாந்தப்படுத்தும் ஒரு முயற்சியாகவும் அவர் இந்து மற்றும் கிறிஸ்தவ மதத் தலைவர்களைச் சந்தித்திருக்கக் கூடும்.
பசிலின் நோக்கம் எப்படியாக இருந்தாலும் தமிழர்கள் இத்தகைய சலசலப்புகளுக்கு அருண்டு வெருண்டு ஓடும் சாதாரண நரிகளல்லர். அவர்கள் பனங்காட்டு நரிகள். ராஜபக்சக்களின் ஆட்சியில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களையும் போர்க்குற்றங்களையும் அவர்கள் இலகுவில் மறந்து விட மாட்டார்கள்.அவர்களது ஆட்சிக் காலத்தில் வரலாற்றிலேயே மிக மோசமாகத் தமிழர்கள் நடத்தப்பட்டதையும் அதனால் ஏற்பட்ட காயங்களையும் வடுக்களையும் இத்தகைய சில சந்திப்புக்களால் மட்டும் குணப்படுத்தி விட முடியாது.
தமிழர்களுக்கு ராஜபக்சக்கள் இழைத்த வன்கொடுமைகளை ஏற்றுக்கொண்டு உண்மைகளை வெளிப்படுத்த அவர்கள் தயாராகாத வரையில் தமிழர்களின் மனங்களை அவர்கள் வெற்றிகொள்வது இயலாதது. தமிழர்களோடும் தமிழர் களின் மதங்களோடும் அரசியல் செய்வதற்கு முன்னர் பசிலும் அவரின் சகாக்களும் புரிந்து கொள்ள வேண்டிய மிக முக் கியமான செய்தி இது.
தமிழர்கள், சலசலப்புக்கு அஞ்சி வெருண்டு ஓடும் சாதாரண நரிகளல்லர்!
Reviewed by Author
on
October 02, 2017
Rating:

No comments:
Post a Comment