ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷனுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு: சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு நியமித்த விசாரணை கமிஷனை ரத்துசெய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் தமிழக அரசு நியமித்த விசாரணை கமிஷனை ரத்துசெய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தனது விசாரணையை 3 மாதங்களில் நடத்திமுடித்து அறிக்கை சமர்ப்பிப்பார் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
இந்த விசாரணை கமிஷனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சென்னையை சேர்ந்த பி.ஏ.ஜோசப் என்பவர் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு மனுவை தள்ளுபடி செய்தது. ஜெயலலிதா மரணம் தொடர்பான கமிஷனின் விசாரணை நேர்மையாக நடைபெறாது என்ற மனுதாரரின் குற்றச்சாட்டிற்கு முகாந்திரம் இல்லை என கோர்ட்டு தெரிவித்தது.
இதனைத்தொடர்ந்து ஐகோர்ட்டின் தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனுதாரர் பி.ஏ.ஜோசப் சார்பில் வக்கீல் சிவபாலமுருகன் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
மாநில அரசு இதுபோன்ற விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமென்றால், அதனை சட்டசபையில் தீர்மானமாக நிறைவேற்றி முடிவெடுக்க வேண்டும். ஆனால், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷனை தமிழக அரசு அமைப்பதற்கு முன்பு சட்டசபையில் எந்த தீர்மானமும் நிறைவேற்றவில்லை. எனவே, தமிழக அரசு நியமித்துள்ள இந்த ஒருநபர் விசாரணை கமிஷன் சட்டப்படி செல்லுபடியாகாது.
ஏற்கனவே இதுபோன்ற வழக்கு ஒன்றில் அலகாபாத் ஐகோர்ட்டு சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாமல் விசாரணை கமிஷன் அமைத்தது தவறு என்று தீர்ப்பு அளித்துள்ளது. அந்த தீர்ப்பு இதற்கும் பொருந்தும். மேலும் இதுபோன்ற விசாரணை கமிஷன் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியின் தலைமையில் தான் நடக்க வேண்டும்.
சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்த விசாரணை கமிஷன் அமைத்தபோது என்ன வழிமுறைகள் பின்பற்றப்பட்டதோ அதே வழிமுறைகளை ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷனிலும் பின்பற்ற வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை கமிஷனுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு: சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்
Reviewed by Author
on
October 25, 2017
Rating:

No comments:
Post a Comment