அடுக்குத் தும்மல் வருவது ஆபத்தா? தடுப்பது எப்படி? -
சாதாரணமாக தும்மல் வந்தால், சில தும்மல்களோடு நின்று விடும். அதே நேரத்தில், சிலருக்கு தினமும் நிமிட கணக்கில் அடுக்கடுக்காக தும்மல் வந்து தொல்லை கொடுக்கும். அதுவும் சிலருக்கு தும்மலோடு மூக்கும் ஒழுகும், இதற்கு ஒவ்வாமைத் தும்மல் நோய் என்று பெயர். அடுக்கு தும்மல் வருவது ஏன்? தும்மல் வருவதற்கு முக்கிய காரணம் தூசுக்கள் தான். அதிலும் குறிப்பாக ஒட்டடை, பருத்தி, பஞ்சு, சணல், சாக்கு, கயிறு, கம்பளி, காகிதம், சிமெண்ட், சுண்ணாம்பு, உமி, மரம், மாவு, தானியம் போன்றவற்றின் தூசு மூக்கில் பட்டால் தும்மல் தொடர்ச்சியாக இருக்கும்.
இதுபோல் ஊதுவர்த்தி, சாம்பிராணி, கற்பூரம், கொசுவர்த்தி போன்றவற்றின் புகை, வாகனப் புகை, புகையிலைப் புகை, தொழிற்சாலைப் புகை ஆகியவை மூலம் மூக்கில் ஒவ்வாமையை ஏற்படுத்தி, தும்மலை ஏற்படுத்தும். குளிர்ந்த காற்று அல்லது பனி, புல், பூண்டு, மரம், செடிகளின் பூக்களிலிருந்து வரும் மகரந்தம், பார்த்தீனியச் செடியின் முள்ளிழைகள், பூஞ்சைக் காளான்கள் ஆகியவையும் தும்மல் நோயை உண்டாக்கும்.
வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை, ஆடு, மாடு, கோழி, வாத்து, முயல், கிளி, புறா, குதிரை, பன்றி போன்றவற்றின் உடலிலிருந்து கிளம்பும் செதில்கள், எச்சங்கள் மற்றும் முடிகள் காரணமாகவும் தும்மல் வரும். படுக்கை விரிப்புகள், பாய், தலையணை, மெத்தை ஆகியவற்றில் மைட்ஸ் எனும் கண்ணுக்குத் தெரியாத தூசுப் பூச்சிகள் இருக்கும். அதனாலும் தும்மல் வரும்.
உணவு ஒவ்வாமை இருந்தாலும் தும்மல் ஏற்பட வழி இருக்கிறது. மூக்கிலும் சைனஸ்களிலும் நோய்த்தொற்று காணப்பட்டாலும் இந்த தும்மல் உருவாகும். தடுப்பது எப்படி?
ஒவ்வாமை உணவுப் பொருட்களை தவிர்த்து விடுவது நல்லது, இம்யூனோதெரபி எனும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.இந்த நோய்க்கு உடனடி நிவாரணம் பெற விரும்பினால், ஸ்டீராய்டு மருந்து கலந்த தெளிப்பானை மூக்கில் போட்டுக் கொள்ளலாம், இதனால் தும்மல் நின்றுவிடும். இவை தவிர, பிராணாயாமம் போன்ற மூச்சுப் பயிற்சிகளும், சில யோகாசனப் பயிற்சிகளும் செய்தால் இந்த தும்மல் நோயை தடுக்கலாம்.
அடுக்குத் தும்மல் வருவது ஆபத்தா? தடுப்பது எப்படி? -
Reviewed by Author
on
November 13, 2017
Rating:
Reviewed by Author
on
November 13, 2017
Rating:


No comments:
Post a Comment