யாழில் திடீரென மரணித்த ஒன்பது பேர்! பின்னணி என்ன? -
யாழ்ப்பாணத்தில் திடீரென நோய்வாய்ப்பட்டு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.யாழ். மாநகர சபையினால் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ள சிற்றங்காடி வியாபார தொகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்ட வந்த வியாபாரிகள் உள்ளிட்ட அவர்களின் உறவினர்கள் என ஒன்பது பேர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அங்கு வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இரண்டு தமிழ் வியாபாரிகள், இரண்டு முஸ்லிம் வியாபாரிகள், மூன்று வியாபாரிகளின் மனைவிமார், ஏனைய இரண்டு வியாபாரிகளின் தாய் மற்றும் மாமா என ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த அனைவரும் திடீரென நோய்வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளதாக குறித்த சிற்றங்காடி வியாபார தொகுதியின் வியாபாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.அத்துடன், இந்த சிற்றங்காடியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளவர்கள் கடும் நட்டத்தை எதிர்நோக்கியிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர்கள், “கடந்த கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குறித்த சிற்றங்காடி வியாபார தொகுதி அமைத்துக் கொடுக்கப்பட்டது. எனினும், அங்கு அமானுஷ்ய சக்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. கடந்த சுமார் 3 மாத காலப் பகுதியில் இந்த சிற்றங்காடி வியாபார தொகுதியில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வியாபாரிகள், அவர்களின் உறவினர்கள் என ஒன்பது பேர் திடீரென நோய் வாய்ப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
இந்த பகுதியில் நடமாடும் அமானுஷ்ய சக்திகள் தான் இதற்கெல்லாம் காரணம். கடந்த 1995ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்த பகுதி சுடுகாடாக காணப்பட்டது. பின்னர் இராணுவ கட்டுப்பாட்டில் நீண்ட காலமாக இருந்து வந்தது. நீண்ட காலத்திற்குப் பின்னர் இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி இருந்தனர்.
இந்த காணியில் ஒரு இந்து ஆலயம் உள்ளது.அந்த ஆலயமும் நீண்ட காலமாக பராமரிக்கப்படாமல் இருந்து வருகின்றது. இந்த நிலையில் தான் இரவு வேளைகளில் அமானுஷ்ய சக்திகள் இந்த பகுதிகளில் உலாவி அட்டகாசம் புரிகின்றது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.இந்த விடயம் தொடர்பில் யாழ். மாநகர சபையின் அதிகாரி ஒருவரிடம் ஊடகம் ஒன்று கேள்வியெழுப்பியுள்ளது.
இதற்கு பதிலளித்து பேசிய அவர்,“இது தேவையற்ற கட்டுக்கதை. பேய், பிசாசு உலாவுகின்றது என்பது மூட நம்பிக்கை” என அவர் கூறியுள்ளார்.எனினும், இந்த விடயத்தை அலட்சியமாக பார்க்கக் கூடாது என பொது மக்களும், அந்த சிற்றங்காடி தொகுதியில் இருக்கும் வியாபாரிகளும், சமூக ஆர்வலர்களும் கருத்து வெளியிட்டுள்ளனர்.
ஏனெனில் அண்மைய காலங்களில் நாட்டின் பல பகுதிகளிலும், மர்மக் காய்ச்சல் குறித்து பொது மக்களிடத்தில் அச்சநிலை ஏற்பட்டுள்ளது.அத்துடன், மர்மக் காய்ச்சல் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.
இவ்வாறான நிலையிலேயே, தற்போது யாழ்ப்பாணத்தில் திடீரென நோய் வாய்ப்பட்டு ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன.எனவே, வியாபாரிகள் குறிப்பிடுவது போல் இந்த உயிரிழப்புகளின் பின்னணியில் அமானுஷ்ய சக்திகள் இருக்கின்றதா? அல்லது வேறேதும் காரணங்கள் இருக்கின்றதா? என்பது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த விடயத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாது உரிய தரப்பினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் திடீரென மரணித்த ஒன்பது பேர்! பின்னணி என்ன? -
Reviewed by Author
on
December 26, 2017
Rating:
Reviewed by Author
on
December 26, 2017
Rating:


No comments:
Post a Comment