மாகாண சபையின் அனுமதியின்றி காணிகளை சுவீகரிக்க முடியாது: வடக்கு முதல்வர்
மாகாண சபைகளின் அனுமதியின்றி காணிகளை சுவீகரிக்கின்ற அதிகாரம் மத்திய அரசாங்கத்திற்கு இல்லை எனவும் யாழ்.மாவட்டத்தில் காணி சுவீகரிக்கப்படுவதற்கு எதிராக நீதிமன்றங்களை நாடி உரிய நடவடிக்கை எடுப்போம் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் ஏற்பாட்டில் மாவட்ட செயலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவர்களான வடமகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் சிறுவர் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தலைமையில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்றது.
இதன்போது, யாழ். மாவட்டத்தில் மண்டைதீவு பகுதியில் கடற்படையினரால் பொது மக்களின் 15 ஏக்கர் காணி சுவீகரிப்பதற்கான விளம்பர அறிவித்தல் ஒட்டப்பட்டுள்ளமை தொடர்பில் ஆராயப்பட்டபோது, வலி.வடக்குப் பகுதிகளில் காணி விடுவிப்பது போன்று பாசாங்கு செய்துகொண்டு மறுபுறத்தில் மண்டைதீவில் கடற்படையினர் பொது மக்களின் காணிகளை சுவீகரிப்பதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்போது, வேலணை பிரதேச செயலர் மத்திய காணி அமைச்சின் செயலாளரினால் தனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலின் பிரகாரம், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரிற்கு தெரியப்படுத்தி அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், பொது மக்களின் ஆட்சேபனைகளையும் காணி அமைச்சின் செயலாளருக்கு அறிக்கை மூலம் அறிவித்துள்ளதாகவும் விக்னேஸ்வரன் கூறினார்.
இதன்போது 25 குடும்பங்களின் 15 ஏக்கர் காணிகள் சுவீகரிப்பதற்கான நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது. சுவீகரிப்பு தொடர்பாக வடமாகாண முதலமைச்சருக்கோ மாகாண சபைக்கோ தெரியப்படுத்தினீர்களா? என்று கேள்வி எழுப்பியதுடன் கடற்படையினரால் பொது நோக்கத்திற்காக காணிகளை சுவீகரிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.
அத்துடன், காணி சுவீகரிப்பிற்கு எதிராக நீதிமன்றங்களிற்குச் செல்ல வேண்டுமாயின் நீதிமன்றத்திற்குச் செல்வோம். காணி சுவீகரிப்புக்கெதிராக உரிய தீர்மானத்தினை எடுக்க வேண்டும் எனவும் இதன் போது கோரிக்கை விடுத்தார்.
அதுமட்டுமன்றி 13 திருத்தச் சட்டத்தின்படி மாகாண சபையின் அங்கீகாரத்தினை பெறாமல் எவ்வாறு காணி சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பீர்கள் என பிரதேச செயலாளரிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
மேலும், மாகாண சபைக்கு காணி சுவீகரிப்புத் தொடர்பாக தெரியப்படுத்தினீர்களா? இது தொடர்பில் படையினருக்கு தெரியப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை எனவும், அவ்வாறு பாதுகாப்பின் நிமிர்த்தம் எனின் மாகாண சபைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.
யாழ்.மாவட்டத்தில் காணி சுவீகரிப்பதானால் நேரடியாக அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு மத்திய காணி அமைச்சு உத்தரவிட முடியாது மாறாக இது தொடர்பில் காணி அமைச்சின் ஊடாக செயற்படுத்தப்பட்டு மாகாணக் காணி அமைச்சிடம் அனுமதி பெற வேண்டும் என கூறினார்.
எதிர்வரும் காலங்களில் காணி அமைச்சு எந்த தேவைக்குரிய காணிகளாக இருந்தாலும் சுவீகரிப்பு அறிவித்தலை மேற்கொள்ளுமாறு பிரதேச செயலாளர்களுக்கு பணிப்புரை விடுப்பதற்கு முன்னர் மாகாணக்காணி அமைச்சரின் அனுமதியைப் பெற வேண்டுமென்று ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானம் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மாகாண சபையின் அனுமதியின்றி காணிகளை சுவீகரிக்க முடியாது: வடக்கு முதல்வர்
Reviewed by Author
on
June 05, 2018
Rating:

No comments:
Post a Comment