வடக்கு மாகாண சபை கோமாளிகள் கூடாரம்! -
வடக்கு மாகாண சபையை கோமாளிகளின் கூடாராம் என்று முன்னாள் வடக்கு - கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் தெரிவித்துள்ளார்.
1983ஆம் ஆண்டு இடம்பெற்ற கறுப்பு ஜூலைக் கலவரங்கள், வெலிக்கடைச் சிறைப் படுகொலைகள் தொடர்பான நினைவஞ்சலிப் பொதுக்கூட்டம் கரவெட்டிப் பிரதேசசபை மண்டபத்தில் மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘‘மாகாண சபைக்கு அதிகாரம் கோரி ஒரு வழக்கேனும் நீதிமன்றில் தாக்கல் செய்யப்படவில்லை, நானாக இருந்தால் 200க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தாக்கல் செய்திருப்பேன்’’ என்றும் அவர் கூறியுள்ளார்.
"எமது ஈழப் போராட்டம் 1987ஆம் ஆண்டே தோற்கடிக்கப்பட்டு விட்டது. நாம் அப்பொழுதே ஒற்றுமையாய் இருந்திருந்தால் ஒரு தீர்வு கிடைத்திருக்கும். ஆனால், இன்று நாடாளுமன்ற தேர்தல், மாகாண சபைத் தேர்தல்களில் அரசியல் கட்சிகள் தமது பதவிகளையும், ஆசனங்களையும் தக்க வைப்பதற்காகவே செயற்படுகின்றன.
தேர்தலை அடிப்படையாகக் கொண்டே ஒற்றுமை என்பது தெரிகின்றது. வடக்கு மாகாண சபை கோமாளிகளின் கூடாரமாக இருக்கின்றது. மாகாண சபையில் 350 தீர்மானங்கள் நிறைவேற்றறப்படுள்ளன. அவற்றால் பயன் ஏதும் இல்லை.
இன்று வரை மாகாண சபைக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்று எந்தவொரு வழக்கும் தாக்கலும் செய்யப்படவில்லை.
நாற்பது வருட நீதிமன்ற அனுபவமுள்ள சட்டமேதை எந்தவொரு வழக்கையும் தமது அதிகாரத்தை வலியுறுத்தி தாக்கல் செய்யவில்லை.
அலிபாபாவும் நாற்பது திருடர்களையும் போல மாகாண சபையில் நான்கு அமைச்சர்களும் ஊழல்வாதிகள் என்று முதல்வர் கூறினார். அப்படிப்பட்ட ஊழல்வாதிகளை அமைச்சர்களாக நியமித்த முதல்வரும் தானாகவே வெளியேறியிருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை.
எமது போராட்டம் தோற்றமைக்கு ஒற்றுமையின்மையே காரணம். நாம் ஒற்றுமையாக இருந்திருந்தால் போராட்டம் தோற்றிருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய - இலங்கை ஒப்பந்தத்தின்படி மாகாண சபைகள் உருவாக்கப்பட்ட போது வடக்கு கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக இருந்தவர் வரதராஜப் பெருமாள்.
இந்திய அமைதிப்படையின் பாதுகாப்பில் அவர் முதலமைச்சர் பதவியை வகித்தார். இலங்கையின் ஜனாதிபதியாக பிரேமதாஸ பொறுப்பேற்றுக் கொண்டு இந்திய அமைதிப் படையை இலங்கையை விட்டு வெளியேறுமாறு தெரிவித்ததை அடுத்து 1989இல் இந்திய அமைதிப்படை வெளியேறிச் சென்ற போது, முதலமைச்சராக இருந்த வரதராஜப் பெருமாளும் அவர்களுடனேயே ஓடிச் சென்று இந்தியாவில் தலைமறைவாக வாழ்ந்தார்.
போர் முடிவடைந்த பின்னர் இந்தியாவில் இருந்து அவ்வப்போது இலங்கைக்கு வருவதை அவர் வழக்கமாகக் கொண்டிருக்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாண சபை கோமாளிகள் கூடாரம்! -
Reviewed by Author
on
July 29, 2018
Rating:

No comments:
Post a Comment