7 தமிழர்களை கொடூரமானவர்களாக அறிவித்த இந்திய அரசாங்கம்...
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்ய முடியாது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது தொடர்பான வழக்கு இன்று உச்ச நீதிமன்றில், நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
இதன்போது மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் பிங்கி ஆனந்த், வக்கீல் ராகேஷ் ரஞ்சன் ஆகியோர் ஆஜராகி மத்திய அரசின் முடிவு தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்தனர்.
அதில் கூறி இருப்பதாவது:-
ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டது மிகக் கொடூரமான குற்றச்செயல் ஆகும். இந்திய ஜனநாயக நடைமுறைப்படி பாராளுமன்ற பொதுத்தேர்தல் பிரசாரத்துக்கு சென்றபோது இந்த படுகொலை நடந்துள்ளது.
குற்றவாளிகள் இரக்கமின்றி இந்த செயலில் ஈடுபட்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது எந்தவித கருணையும் காட்ட முடியாது. அதற்கான தகுதி இல்லை.
அவர்களை விடுதலை செய்வது அபாயகரமானது. மோசமான முன்னுதாரணமாக அமைந்து விடும். நீதித்துறை மற்றும் நிர்வாகத்துறை என பல மட்டத்தில் ஆலோசனை நடத்தியதில் 7 பேரையும் விடுதலை செய்வதற்கு எந்த தகுதியும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது.
குற்ற நடைமுறைச் சட்டம் 435-வது பிரிவின்படி இந்த விஷயத்தில் முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை. மத்திய அரசின் இந்த முடிவு தமிழக அரசுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரை மத்திய அரசு விடுவிக்க மறுத்து விட்டது உறுதியாகி உள்ளது.
இந்த அறிக்கையுடன் 7 பேரின் கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்தற்கான ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் முடிவை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதாக அறிவித்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு மீண்டும் கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்வதாக தமிழக அரசின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
தமிழக முதல்வரின் தீர்மானத்திற்கு எதிராக இந்திய மத்திய அரசாங்கம் வழக்கு தொடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
7 தமிழர்களை கொடூரமானவர்களாக அறிவித்த இந்திய அரசாங்கம்...
Reviewed by Author
on
August 10, 2018
Rating:

No comments:
Post a Comment