முத்தரிப்புத்துறை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடு -
மன்னார் மாவட்டம் முசலிப் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முத்தரிப்புத்துறை மீனவர்கள், கடல் தொழில் ஒன்றையே தங்கள் வாழ்வாதாரமாக மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்நிலையில் இந்திய மீனவர்கள் கடந்த பல நாட்களாக இழுவைப்படகுகளால் குறித்த மீனவர்களின் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான வலைகளை சேதப்படுத்தியும் களவாடியும் சென்றுள்ளனர் அப்பகுதி மீனவர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
கடந்த 23 ஆம் திகதி இந்திய மீனவர்கள், மீண்டும் அத்துமீறி முத்தரிப்புத்துறை மீனவர்களின் வலைகளை சேதப்படுத்தி களவாடிச் சென்றுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இது தொடர்பில் முத்தரிப்புத்துறை மீனவர்கள் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,
இவ்வாறு கடந்த ஒருவார காலமாக நடந்து கொண்டிருக்கின்றது, ஆரம்பத்தில் சில நாட்களுக்கு முன் ஒரு தடவை இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள் தற்போது தினமும் கும்பலாக இழுவைப் படகுகளில் வந்து எமது வலைகளை சேதப்படுத்தி அவ்விடத்தில் விட்டுச் செல்வதுண்டு.
சிலவேளை அவற்றை இழுத்துச்சென்று நடுக்கடலில் விட்டும் அல்லது அவற்றை களவாடியும் சென்று விடுகிறார்கள்.
தற்போது காற்று காலம் என்பதால் அதிகளவான மீனவர்கள் பெரும்பாலும் தொழிலில் நஷ்டத்தை சந்திக்க வேண்டியுள்ளது.
இந்த நிலையில் இவ்வாறான பல இலட்சம் பெறுமதியான வலைகள் நாசம் செய்யப்படுவதனால் தொடர்ச்சியாக பல்வேறு இன்னல்களுக்கு முகம்கொடுக்க நேரிடுகின்றது.
இந்திய மீனவர்களின் இந்த அத்துமீறிய செயற்பாட்டிற்கு கடற்படை ஒத்துழைப்பு வழங்குவதாக எமக்கு சந்தேகம் ஏற்படுகின்றது.
ஏனெனில் கடற்படையினரிடம் ஒவ்வொரு தடவையும் சம்பவங்கள் பற்றி முறைப்பாடுகள் செய்தும் அவர்கள் எந்த வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளனர்.
எனவே தொடர்ச்சியாக பாதிப்படையும் மீனவர்களுக்கான இழப்புக்களுக்கு நஷ்ட ஈடு வழங்குவதோடு இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முத்தரிப்புத்துறை கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடு -
Reviewed by Author
on
August 25, 2018
Rating:

No comments:
Post a Comment