இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டவர்கள் கைது! -
உத்தர பிரதேசத்தின் மதுரா பகுதியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த குற்றச்சாட்டில், 16 பங்களாதேஷ் நாட்டவர்கள் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடமிருந்து 7 அலைபேசிகள், 8 ஆதார் அட்டைகள், ஒரு தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள், ஓட்டுநர் உரிமம் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மதுரா மாவட்டத்தின் கோசி நகரத்தில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் இவர்கள் தங்கியிருந்த போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் இப்பகுதியில் குப்பை பொறுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இது தொடர்பாக பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் பேசியுள்ள காவல் கண்காணிப்பாளரான ஆதித்யா குமார் சுக்லா,
“எங்களுக்கு தகவல் கிடைத்ததை அடுத்து, உள்ளூர் உளவுத்துறையும், காவல்துறையும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையில் பங்களாதேஷை சேர்ந்த 16 பேரும், அவர்களுடன் சட்டவிரோதமாக தங்கியிருந்த 4 குழந்தைகளும் கைது செய்யப்பட்டனர்” எனக் கூறியுள்ளார்.
இவர்கள் இதே கோசி நகரப்பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தங்கியிருந்ததாகக் கூறப்படுகின்றது.
இவ்வாறான குடியேறிகளை கடத்தி வரும் இரண்டு பேர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றொருவர் தலைமறைவாகியுள்ளதாகவும் காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பங்களாதேஷிலிருந்து இந்திய எல்லைக்குள் வருவதற்காக ஒவ்வொரு குடியேறியும் 8 ஆயிரம் முதல் 10,000 ரூபாய் வரை செலுத்தியுள்ளனர்.
பங்களாதேஷிலிருந்து சட்டவிரோதமாக அசாமில் குடியேறியுள்ளவர்களை கண்டறியும் வகையில், அசாம் மாநிலத்துக்கு மட்டும் ‘தேசிய குடிமக்கள் பதிவேடு’ என்ற பிரத்தியேக நடைமுறை பல ஆண்டுகளுக்கு முன்பே கொண்டு வரப்பட்டது.
மார்ச் 1971ம் ஆண்டின் பின் அசாமில் நுழைந்தவர்கள் சட்டவிரோத குடியேறிகள் என்ற அடிப்படையில், இவ்வாண்டின் தொடக்கத்தில் இப்பதிவேட்டின் முதல்கட்ட பட்டியல் வெளியானது.
கடந்த ஜூலை 30 அன்று வெளியான இறுதிப்பட்டியலில், தற்போது அசாமில் உள்ள 40 லட்சம் பேரின் பெயர் விடுப்பட்டிருந்தது.
சட்டவிரோத குடியேறிகளாக அறியப்படுபவர்கள் நாடுகடத்தப்படுவார்கள் எனத் தொடர்ந்து சொல்லி வரும் பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு, தான் ஆளும் மாநிலங்களிலும் அதை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்வது இங்கு குறிப்பிடத்தக்கது.
பங்களாதேஷுடன் பல இந்திய மாநிலங்கள் சிக்கலான எல்லைப்பகுதியை பகிர்ந்து கொண்டிருக்கின்றது.
இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே உள்ள 4,156 கிலோ மீட்டர்களில் அசாம் (262 கி.மீ.), மேற்கு வங்காளம் (2,217 கி.மீ.), திரிபுரா (856 கி.மீ.), மிசோரம் (180 கி.மீ.), மேகாலயா (443 கி.மீ.) கொண்டிருக்கின்றது.
இதில் பங்களாதேஷ் குடியேறிகள் பிரச்னைகளை அதிகம் எதிர்கொள்ளும் மாநிலங்களாக அசாமும் மேற்கு வங்காளமும் உள்ளன.
இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வெளிநாட்டவர்கள் கைது! -
Reviewed by Author
on
October 10, 2018
Rating:

No comments:
Post a Comment