இறுதி யுத்தத்தில் பெருமளவான மக்களின் உயிரிழப்பிற்கு இதுவே காரணம்! -
இறுதி யுத்தத்தில் அதிகளவான பொது மக்களின் உயிரிழப்புக்கு கொத்துக் குண்டுகளான கிளஸ்டர் குண்டுகளே பிரதான காரணமாகும் என வடமாகாண சபை உறுப்பினர் சபா.குகதாஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன், முள்ளிவாய்க்கால் யுத்தத்தில் காயமடைந்த பலரது காயங்களுக்குள் கிளஸ்டர் குண்டுகளின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
யாழ். நகரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,
“இறுதி யுத்தத்தில் விடுதலை புலிகளின் இராணுவ இயந்திரத்தை சிதைப்பதற்காக இலங்கை இராணுவம் பயன்படுத்திய கிளஸ்டர் குண்டுகள் பெருமளவு அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தது.
யுத்தம் முகமாலை பகுதியில் ஆரம்பித்தபோது கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்த ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இராணுவம் சுதந்திரபுரம் வந்ததும் மிகத் தீவிரமாக கிளஸ்ரர் குண்டுகள் மக்கள்மீதும் குடியிருப்புக்கள் மீதும் பாய்ந்தன.
இதற்கான ஆதாரங்கள் கண்ணிவெடி அகற்றும் ஹெலோ ரஸ்ற் (Hello Trust) நிறுவனத்தால் வெளியிடப்பட்டது.
குறிப்பாக பச்சிலைப்பள்ளி சுண்டிக்குளம் சாலை சுதந்திரபுரம் புதுக்குடியிருப்பு ஆனந்தரபுரம் மாத்தளன் முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் கரை போன்ற இடங்களில் ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
உண்மையில் இங்கு பயன்படுத்தப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் ரஷ்யா நாட்டுத் தயாரிப்பு என்பதனை உறுதி செய்துள்ளன. யுத்தத்தில் காயமடைந்த பலரது காயங்களுள் இக்குண்டின் சிதைவுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையிலேயே, ஆனந்தபுரம் சண்டையில் 600க்கும் மேற்பட்டபுலிகளின் முக்கிய தளபதிகள் உள்ளிட்டோர் கொல்லப்பட்டனர். கிளஸ்டர் குண்டுகளும் அதிகளவில் பயன்படுத்தப்பட்ட காரணத்தினாலேயே உடல்கள் சிதைந்தும் கருகியும் காணப்பட்டன.
எவ்வாறாயினும், கிளஸ்டர் குண்டுகள் சர்வதேச சட்டங்களுக்கு அமைவாக உள்நாட்டு யுத்தத்தில் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது” என அவர் மேலும் கூறியுள்ளார்.
இறுதி யுத்தத்தில் பெருமளவான மக்களின் உயிரிழப்பிற்கு இதுவே காரணம்! -
Reviewed by Author
on
October 16, 2018
Rating:

No comments:
Post a Comment