யாழ். மண்டைதீவிலும் மனிதப் புதைகுழி! நாடாளுமன்றத்தில் சி.சிறீதரன்mp
குறிப்பாக யாழ்ப்பாணம் மண்டைதீவில் தோமையார் தேவாலயம் அருகிலுள்ள கிணற்றிலும் செம்பாட்டு பிள்ளையார் கோயில் அருகிலுள்ள கிணற்றிலும் தமிழ் இளைஞர்கள் இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு புதைக்கப்பட்டனர் எனவும், அவற்றை தோண்டியெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
நாடாளுமன்றம் இன்று (புதன்கிழமை) பிற்பகல் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் கூடியது. இன்றைய அமர்வில், இரசாயன ஆயுதங்கள் சமவாய (திருத்தச்) சட்டத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோது அவர் இவ்விடயத்தை வலியுறுத்தினார்.
குறிப்பாக போர்க்காலத்தில் நீர்வேலி, மண்கும்பான் மற்றும் வேலணை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமார் 120 இற்கு மேற்பட்ட தமிழ் இளைஞர்கள் இராணுவத்தால் அழைத்துவரப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டு கிணறுகளில் போட்டு மூடப்பட்டதாக சிறீதரன் எம்.பி. கூறினார். அவற்றை இராணுவத்தினர் சீமெந்து இட்டு மூடியுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
இவற்றை தோண்டியெடுத்து, உரிய விசாரணைகள் நடத்தப்பட்டு, உண்மைகள் வெளிக்கொண்டுவரப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
அத்தோடு, இலங்கையில் இறுதிப் போரின்போது இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாகக் குறிப்பிட்ட சிறீதரன் எம்.பி., அவ்வாறு பயன்படுத்தப்படாவிட்டால் எதற்காக சர்வதேச விசாரணைக்கு அஞ்சவேண்டும் என்ற கேள்வியையும் முன்வைத்தார்.
இரசாயனக் குண்டுகளின் தாக்கம் வன்னியில் இன்றும் காணப்படுகின்றது எனவும், அதனால் பிறக்கும் குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர் எனவும் சிறீதரன் எம்.பி. சுட்டிக்காட்டினார்.
சிறீதரன் எம்.பியின் குற்றச்சாட்டுக்கள் மற்றும் கோரிக்கைகளுக்கு அமைச்சர் மனோ கணேசன் பதிலளித்தார். அதாவது தமது அமைச்சின் கீழ் காணாமல்போனோர் அலுவலகம் வருகின்ற நிலையில், இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக மனோ உறுதியளித்தார்.
இவ்விடயங்கள் தொடர்பாக எழுத்துமூலம் தமக்கு அறிவிக்குமாறும், தாம் உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மனோ கூறினார்.
யாழ். மண்டைதீவிலும் மனிதப் புதைகுழி! நாடாளுமன்றத்தில் சி.சிறீதரன்mp
Reviewed by Author
on
January 10, 2019
Rating:

No comments:
Post a Comment