அகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்? -
ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் உடல் மற்றும் மனநல ரீதியாக பாதிக்கப்பட்ட அகதிகளை ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டு வந்த மேலதிக சிகிச்சையை வழங்க ‘மருத்துவ வெளியேற்ற சட்டம்’ வழிவகைச் செய்கின்றது. கடந்த பிப்ரவரி மாதம் , எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட இம்மசோதா ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமானது.
சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
1. ஓர் அகதி அல்லது தஞ்சக்கோரிக்கையாளரை ஆஸ்திரேலியாவுக்கு இடம் மாற்ற இரண்டு அல்லது அதற்கு அதிகமான மருத்துவர்களிடம் மருத்துவ அறிவுரை பெற வேண்டும்.
2. ஆஸ்திரேலிய உள்துறை அமைச்சருக்கு இந்த இடமாற்றத்தை நிராகரிக்கும் அதிகாரம் உண்டு. எவரை நிராகரிக்கலாம்? சம்பந்தப்பட்ட அகதி மருத்துவ பரிசோதனைக்கு மறுப்பு தெரிவித்தால் நிராகரிக்கலாம். சம்பந்தப்பட்ட அகதியை இடமாற்றுவது பாதுகாப்பு அச்சுறுத்தலாக மாறக்கூடும் என சந்தேகித்தால் நிராகரிக்கலாம். சம்பந்தப்பட்ட அகதியின் மீது குறிப்பிடத்தக்க குற்றப்பதிவுகள் இருந்தால் நிராகரிக்கலாம். இது குறித்த முடிவை 72 மணிநேரத்திற்குள் எடுக்க வேண்டும்.
3. சம்பந்தப்பட்ட அகதியின் இடமாற்ற கோரிக்கை நிராகரிக்கப்படும் பட்சத்தில் இவ்விவகாரம் சுதந்திர சுகாதார ஆலோசனைக் குழுவின் பார்வைக்கு செல்லும். இரண்டாவது முறையாக பரிசீலித்து 72 மணிநேரத்திற்குள் தங்கள் முடிவினை அவர்கள் தெரிவிக்க வேண்டும்.
4. எவருக்கு பொருந்தும்? இந்த மருத்துவ வெளியேற்ற சட்டம் தற்போது நவுரு மற்றும் மனுஸ்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அகதிகள் அல்லது தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு மட்டுமே பொருந்தும். புதிதாக படகுகளில்
வருபவர்களுக்கு பொருந்தாது.
5. சம்பந்தப்பட்ட அகதி ஆஸ்திரேலியாவுக்குள் கொண்டு வரப்பட்டாலும் அவர் தடுப்புக்காவலிலேயே வைத்திருக்கப்படுவார்.
இந்த மருத்துவ வெளியேற்ற மசோதா எதிர்க்கட்சிகளால் நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பொழுதே அதனை ஏற்க மறுத்தது ஆளும் லிபரல் கூட்டணி அரசு. அத்துடன், இப்படி அகதிகளை அனுமதிப்பது ஆஸ்திரேலியாவுக்கு
பாதுகாப்பு
அச்சுறுத்தலாக மாறும் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் எச்சரித்தார். அதை எதிர்கொள்ளும் விதமாக, கிறிஸ்துமஸ் தீவில் மூடப்பட்ட தடுப்பு முகாமை மீண்டும் திறப்பதாக அறிவித்து புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது ஆளும் லிபரல் கூட்டணி அரசு.
தேர்தலில் பெரும்பான்மை பலத்தைப் பெற்று அச்சட்டத்தை நீக்குவோம் எனக் கூறிவந்த லிபரல் கூட்டணி அரசு, சமீபத்தில் நடந்து முடிந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றது.
90 ஆண்டுகளுக்குப் பின் ஆளும் அரசாங்கத்தின் எண்ணத்திற்கு எதிராக இப்படியொரு மசோதா நிறைவேறியது வரலாற்று தோல்வியாகப் பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் வெற்றியின் பின்னர் அதனை நீக்கும் முயற்சியில் ஆளும் லிபரல் கூட்டணி அரசு இறங்கியுள்ளது.
மனுஸ் மற்றும் நவுருத்தீவில் செயல்பட்டு வரும் ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 1000 அகதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அகதிகளுக்கான மருத்துவ வெளியேற்ற சட்டத்தை ஆஸ்திரேலியா நீக்க துடிப்பது ஏன்? -
Reviewed by Author
on
May 27, 2019
Rating:

No comments:
Post a Comment