ஐ.பி. எஸ் பதவியை உதறிவிட்டு சொந்த ஊருக்கும் திரும்பும் தமிழன்...
மே 28ம் தேதி தனது ராஜிநாமா கடிதத்தை அவர் சமர்பித்துள்ளதாக கூறி, தனது நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகள் அனைவருக்கும் கடிதம் ஒன்றை இணையத்தில் அனுப்பியுள்ளார்.
ஐபிஎஸ் அதிகாரிகளில் கம்பீரமாகவும், நேர்மையாகவும் செயல்படுபவர் என்ற பெருமை பெற்று "கர்நாடக சிங்கம் போலீஸ்" என்று அறியப்படுகிறார் அண்ணாமலை.

ஆறு மாதங்கள் நன்றாக சிந்தித்து இந்த முடிவை எடுத்துள்ளதாக கடிதத்தில் தெரிவித்துள்ள அண்ணாமலை, கடந்த ஒன்பது ஆண்டுகால காவல்துறையின் பணியில், ஒவ்வொரு நொடிபொழுதையும் தனது காக்கி உடைக்கான பணியை வாழ்ந்து காட்டியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
காக்கியால் வருகின்ற பெருமையை வேறு எதனுடனும் ஒப்பிட முடியாது என்று தெரிவித்துள்ள அண்ணாமலை, போலீஸ் வேலை கடவுளுக்கு மிகவும் நெருக்கமான வேலை என்று கூறியுள்ளார். தனக்கு பிடித்த ஐபிஎஸ் மதுக்கார் ஷெட்டியின் இறப்பு தனது சொந்த வாழ்க்கையை சுய ஆய்வுக்குட்படுத்தி பார்க்க தூண்டியதாக அண்ணாமலை கூறியுள்ளார்.

இந்திய மக்களவைத் தேர்தலுக்கு முன்னால் பதவியை ராஜிநாமா செய்வதன் மூலம் கஷ்டங்களை வழங்கக்கூடாது என்பதாலேயே, தேர்தல்கள் முடிந்த பின்னர், இந்த முடிவை நிறைவேற்றியுள்ளதாக அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.
இனிமேல் தனது நேரத்தை குடும்பத்தோடு செலவிட்டு, விரைவாக வளர்ந்து வரும் மகனோடு மகிழ்ச்சியாக கழிக்க விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.சொந்த ஊருக்குச் சென்று விவசாயத்தில் ஈடுபட்டு, எனது ஆடு இன்னும் எனது குரலுக்கு செவிமடுக்கிறதா என்பதை பார்க்க ஆசையோடு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
யார் இந்த அண்ணாமலை?
அண்ணாமலையின் தந்தை பெயர் குப்புசாமி. கரூர் மாவட்டம் சின்னதாராபுரத்திலுள்ள சொக்கம்ப்பட்டி கிராமம்தான் அண்ணாமலையின் பூர்வீகம்.கோவையிலுள்ள பிரபல கல்வி நிறுவனம் ஒன்றில் அண்ணாமலை தனது கல்லூரி படிப்பை முடித்துள்ளார். பின்னர் லக்னோவில் உள்ள இந்திய மேலாண்மை நிறுவனத்தில் தனது மேல்படிப்பை படித்துள்ளார்.
2008ஆம் ஆண்டு மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தனக்குள் சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும், ஓய்வுப்பெற்ற போலீஸ் அதிகாரி விஜயகுமார்தான் தனது ரோல் மாடல் என்றும் நேர்க்காணல் ஒன்றின்போது தெரிவித்துள்ளார் அண்ணாமலை.
சமூக ஊடகங்களில் வருந்தும் அண்ணாமலையின் ரசிகர்கள்
கர்நாடகாவின் 'சிங்கம்' என்று வர்ணிக்கப்படும் அண்ணாமலையின் ராஜிநாமா முடிவு கர்நாடக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது."கர்நாடகாவின் சிறந்த போலீஸ் அதிகாரிகளில் ஒருவர் வேலையைவிட்டு செல்கிறார். அவரை உடுப்பி மற்றும் சிக்மங்களூர் மக்கள் மிஸ் செய்வார்கள். அவருடைய எதிர்கால திட்டத்திற்கு என்னுடைய வாழ்த்துகள்." என்று பதிவிட்டுள்ளார் வினய்.
அண்ணாமலையின் அதிரடி இரண்டாம் பாகத்துக்கு தயாராக இருங்கள். ஒழுக்கம், நேர்மை மற்றும் ஒற்றுமைக்கு பெயர் பெற்றவர். கர்நாடகா போலீஸ் நிச்சயம் உங்களை மிஸ் செய்யும்." என்கிறார் பரத்.
- BBC - Tamil
ஐ.பி. எஸ் பதவியை உதறிவிட்டு சொந்த ஊருக்கும் திரும்பும் தமிழன்...
Reviewed by Author
on
May 29, 2019
Rating:
No comments:
Post a Comment