கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ் அகதி குடும்பம்
கடந்த 2012 ல் படகு வழியாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருந்த நடேசலிங்கமும், 2013 ல் தஞ்சமடைந்திருந்த பிரியாவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்த பின் திருமணம் செய்து கொண்டு, பிலோயலா (Biloela) என்ற நகரில் நான்கு ஆண்டுகளாக வசித்து வந்தனர்.
இந்த சூழலில், விசா காலாவதியாகியதாக கடந்த மார்ச் 2018ல் கைது செய்யப்பட்ட இவர்கள் மெல்பேர்ன் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டனர்.
இவர்களுக்கு தருணிகா மற்றும் கோபிகா என்று இரு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் இருவருமே அவுஸ்திரேலியாவில் பிறந்தவர்கள்.
அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக வசிப்பதற்கான இவர்களது மேல்முறையீடு மனுவும் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்ட நிலையில், இக்குடும்பத்தை நாடுகடத்துவதில் ஆஸ்திரேலிய அரசு உறுதியாக இருந்து வந்தது.
அந்த வகையில், சில தினங்களுக்கு முன்பு நாடுகடத்தல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கு இடைக்காலத் தடை விதித்தார் மெல்பேர்ன் நீதிபதி ஹீதர் ரிலே.
இதனால், டார்வின் நகருக்கு சென்றடைந்த விமானத்திலிருந்து இறக்கப்பட்ட இக்குடும்பம் டார்வின் ராணுவ தளத்தில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டனர்.
பின்னர் நடந்த விசாரணையில், 2 வயதான தருணிகாவை வரும் புதன்கிழமை வரை நாடுகடத்தக்கூடாது என உத்தரவிட்டது மெல்பேர்ன் நீதிமன்றம்.
இந்த நிலையில், பிரியா- நடேசலிங்கம் குடும்பம் கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இந்த நாடுகடத்தலை தடுக்க போராடும் Home to Bilo குழு, குடும்பத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
“என் குழந்தைகள் அவர்களது உலகத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளனர்,” எனக் கூறியிருக்கிறார் பிரியா. 2 வயது தருணிகாவின் தஞ்சக்கோரிக்கை இதுவரை பரிசீலிக்கப்படாததால் அக்குழந்தைக்கு பாதுகாப்பு கிடைக்கும்.
குடும்பத்தின் மற்ற மூவரின் சட்ட வாய்ப்புகள் பயன்படுத்தப்பட்டுவிட்டதால் அவர்கள் நாடுகடத்தப்படக்கூடும் என இக்குடும்பத்திற்கு சட்ட உதவி வழங்கும் குழு குறிப்பிட்டுள்ளது.
அதே சமயம், குடும்பத்தை பிளவுப்படுத்தினால் அவுஸ்திரேலிய அரசு கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் எனக் கூறப்படுகின்றது.
அவுஸ்திரேலியாவின் பல்வேறு தரப்பிலிருந்து அழுத்தம் வழங்கப்பட்டு வரும் நிலையிலும், உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன் இக்குடும்பத்திற்கு தஞ்சம் வழங்க மறுத்து வருகிறார்.
நிச்சயமற்ற எதிர்காலத்தினால் இக்குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருக்கிறார் தமிழ் அகதிகள் கவுன்சிலின் பேச்சாளர் அரண் மயில்வாகனம்.
“எங்களது மக்களை இந்த வகையில் அவுஸ்திரேலிய அரசு நடத்துவது மிகவும் மனதை வருந்த செய்கிறது. அவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்தை தேடியே இந்நாட்டிற்கு வந்தார்கள்.
இலங்கை, தமிழர்களுக்கு ஆபத்தான நாடு. பிரியாவும் நடேசலிங்கமும் ஆபத்தான சூழ்நிலைகளுக்கிடையில் இலங்கையிலிருந்து வெளியேறியவர்கள்.”
கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு செல்லப்பட்ட தமிழ் அகதி குடும்பம்
Reviewed by Author
on
September 01, 2019
Rating:

No comments:
Post a Comment