சீரற்ற காலநிலையில் இதுவரை 4 பேர் பலி - வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை -
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்ததுடன், 6 காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு தென்கிழக்காக விருத்தியடைந்துள்ள வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக சீரற்ற காலநிலை தொடர்வதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அடைமழையுடனான சீரற்ற காலநிலை தொடருமென திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
அடுத்துவரும் சில தினங்களுக்கு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும் எனவும் 17 மாவட்டங்களுக்கு தொடர்ந்து சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் சில இடங்களில் 200 மில்லிமீற்றர் அளவான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
மத்திய மாகாணத்திலும் அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை, முல்லைத்தீவு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100-150 மில்லிமீற்றர் அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.
வடமேல், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
சீரற்ற காலநிலையில் இதுவரை 4 பேர் பலி - வடக்கு, கிழக்கு உட்பட பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை -
Reviewed by Author
on
December 08, 2019
Rating:

No comments:
Post a Comment