அண்மைய செய்திகள்

recent
-

விசுவமடு மத்திய சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற "உள்ளம்" சஞ்சிகை அறிமுக நிகழ்வு!

விசுவமடு மத்திய சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற "உள்ளம்" சஞ்சிகை அறிமுக நிகழ்வு! கலை, இலக்கியம், சமூகம், விளையாட்டு, மருத்துவம், உளவியல், தேர்ந்த சினிமா, போட்டிகள் என அநேக தரமிக்க படைப்புகளோடு வெளிவரும் 'உள்ளம்' இதழின் அறிமுக நிகழ்வானது ஈழத்தின் விசுவமடு மத்திய சனசமூக நிலைய மேற்றள அரங்கில் நேற்று(18) வெள்ளிக்கிழமை கலை 10.00 மணிக்கு ஆரம்பமாகி இடம்பெற்றது. விசுவமடு மத்திய நூலக வாசகர் வட்டத்தின் தலைவர் சர்வேஸ்வரன் வில்லரசன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது.

 வரவேற்புரையினை விசுவமடு மத்திய நூலக நூலகர் ரயுலா திருச்செல்வன் வழங்கினார். அதனைத் தொடர்ந்து தொடர்ந்து 'உள்ளம்' இதழானது பங்கேற்பாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. தலைமையுரையினைத் தொடர்ந்து 'உள்ளம்' இதழின் காலாண்டிதழ் மார்கழி 2021இன் அறிமுகவுரையினை யோ.புரட்சி நிகழ்த்தினார். புதுக்குடியிருப்பு பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் ச.தனுஜன் 'சிற்றிதழ்களில் உள்ளம் சஞ்சிகையின் முக்கியத்துவம்' பற்றி உரை நிகழ்த்தினார். தொடர்ந்து பங்கேற்பாளர்களின் கருத்துப்பகிர்வு இடம்பெற்றதுடன் கிளி/தர்மபுரம் மகா வித்தியாலய அதிபர் இந்திரா, மருத்துவ எழுத்தாளரும் வாணி வைத்திய நிலைய மருத்துவருமாகிய சிவசுப்பிரமணியம், இளைய படைப்பாளர் பாரதிமைந்தன் ஆகியோர் காத்திரமானதும், வேண்டியதுமான கருத்துக்களை பகிர்ந்தனர். 

 தொடர்ந்து 'உள்ளம்' ஆசிரியர் குழு சார்பாக கவிஞர் ஆ. சடாகோபன் ஏற்புரை வழங்கினார். இதன்போது 'உள்ளம்' மார்கழி 2021 காலாண்டிதழில் ஓவியங்களை அளித்தோரில் ஒருவரான கிளி/தர்மபுரம் மகா வித்தியாலய மாணவி கயாழினி தேவராஜன் அவர்களை பாராட்டி மதிப்பளித்த ஆ.சடாகோபன் குறித்த இதழானது நாற்பது ஆண்டுகளுக்கு முன்னே வகித்த இலக்கிய மற்றும் வாசிப்பு முக்கியத்துவத்தினை விரிவாக பகிர்ந்து, நவீன சமூகத்திற்கு வேண்டிய அநேக செய்திகளை தெளிவுற வழங்கினார். 

 மிகவும் பயனுள்ளதும், அறிவுசார் விருத்திக்கு துணை செய்வதுமான பெறுமதிநிறை நிகழ்வாக அமையப்பெற்ற இந் நிகழ்வில் 'உள்ளம்' இதழினை வெளியிடும் கொக்குவில் வளர்மதி முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஆ.சத்தியமூர்த்தி, சமூகத்தின் இளைய, மூத்த படைப்பாளர்கள், கல்விச் சமூகத்தினர், வாசகர்கள், சமூக ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். 1980இல் தொடங்கப்பட்ட இதழின் மீள்வருகையாக இது அமையப்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.








விசுவமடு மத்திய சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற "உள்ளம்" சஞ்சிகை அறிமுக நிகழ்வு! Reviewed by Author on March 19, 2022 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.