முல்லைத்தீவு மாவட்ட காணி பிரச்சினைகளை ஆய்விற்கூடாக ஆவணம் தயாரித்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்!
UNHCR நிறுவனத்தின் அனுசரனையுடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவுகின்ற காணிப்பிரச்சினைகள் தொடர்பாகவும் அவை விடுவிக்கப்படவேண்டியதன் அவசியம்,
குறித்த காணிகளில் முன்பு மக்கள் மேற்கொண்ட வாழ்வாதார நடவடிக்கைகள் மற்றும் விடுவிக்கப்பட்டால் குறித்த காணிகளில் பொதுமக்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாக நான்கு குழுக்கள் அமைக்கப்பட்டு பொருத்தமான ஆவணமொன்றை தயாரிக்கும் நோக்குடன் குறித்த கலந்துரையாடலானது கட்டங்கட்டமாக இடம்பெற்று வருகின்றது.
மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், வனபரிபாலன திணைக்களங்கள் கையகப்படுத்தியுள்ள பொதுமக்களின் காணிகளை சரியான முறையில் இனங்கண்டு துல்லியமான ஆவணம் தயாரிக்கும் பணியில் முதலாவது குழு செயற்பட்டு வருகின்றது.
மாகாண காணி ஆணையாளர் தலைமையில் பயிர் செய்யப்படாத நிலங்களின் காணி உரிமங்கள் தொடர்பான மக்கள் பிரச்சினைகளை தீர்க்கும் வழிமுறைகள் தொடர்பான ஆவணம் தயாரிக்கும் பணியில் இரண்டாவது குழு ஈடுபட்டுவருகின்றது.
பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் தலைமையில் பயிர்செய்யப்படாதுள்ள நிலங்களில் பயிர்ச்செய்கைக்கு நீர் விநியோகம் மற்றும் அதுசார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கான வழிமுறைகளை உள்ளடக்கிய ஆவணம் தயாரிக்கும் பணியில் மூன்றாவது குழு ஈடுபட்டுவருகின்றது.
பிராந்திய விவசாயப் பணிப்பாளர்(ஆராய்ச்சி) கலாநிதி அரசகேசரி தலைமையிலான குழுவினர் குறிப்பிட்ட நிலங்களின் தன்மைகள், அவற்றுக்கு பொருத்தமான பயிரினங்கள், சந்தை வாய்ப்புக்கள் தொடர்பான ஆய்வுகளினூடாக ஆவணம் தயாரிக்கும் பணியில் நான்காவது குழு ஈடுபட்டு வருகின்றது.
இறுதியில் நாக்கு குழுக்களின் கருத்துக்களுடன் மாவட்டத்திற்கென தீர்க்கமான ஆவணம் தயாரிக்கப்பட்டு உரிய தரப்புக்களிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறுதியில் பொதுமக்கள் காணிகள் விடுவிப்பதன் அவசியங்களை வலியுறுத்துவதாக குறித்த ஆவணம் அமையப்பெறும்.
நீதி அமைச்சின் நடமாடும் சேவையின் போது நீதி அமைச்சரின் முல்லைத்தீவு விஜயம் மற்றும் வவுனியாவில் அமைச்சருடனான காணி பிரச்சினை தொடர்பான கலந்துரையாடலில் முதற்குழுவின் ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டு அளிக்கை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
குறித்த கலந்துரையாடலில் மாகாண காணி ஆணையாளர் மற்றும் பிரதிநிதிகள், மேலதிக மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட நில அளவை அத்தியட்சகர், ஓய்வு நிலை மாகாண உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர்கள், HLP திட்ட உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்ட காணி பிரச்சினைகளை ஆய்விற்கூடாக ஆவணம் தயாரித்தல் தொடர்பான விசேட கலந்துரையாடல்!
Reviewed by Author
on
March 24, 2022
Rating:

No comments:
Post a Comment