கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு விவகாரம்:- சர்வதேச கண்காணிப்பின்றி அகழ்வு முன்னெடுக்கப்படுவதில் திருப்தியில்லை - ரவிகரன்
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு விவகாரம், சர்வதேச கண்காணிப்பின்றி இடம்பெறுவது திருப்தி அளிக்கவில்லை என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அதேவேளை இந்த அகழ்வுப் பணியில் தொல்லியல் துறையினர் மீதும் தமக்கு நம்பிக்கை இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வுப் பணி இன்று(6) காலை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த அகழ்வுப் பணிகளை பார்வையிட்ட பின்னர் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி தொடர்பான விடயத்தில், கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற ஆரம்பக்கட்ட அகழ்வுப் பணிகளில் 13 உடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளிவந்தன.
அதன் பின்னர் அந்த அகழ்வுப் பணிகள் நிறுத்தப்பட்டு, கடந்த 05 ஆம் திகதி மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டது.
எனினும் முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக அகழ்வுப் பணிகள் தாமதமாகி, இன்று 06ஆம் திகதி இந்த அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த அகழ்வுப்பணி தொடர்பில் கடந்த ஜூலை மாதம் 13ஆம் திகதி முல்லைத்திவு நீதிமன்றில் இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக தொல்லியல் துறை சார்ந்தவர்களும் இந்த அகழ்வுப் பணிகளில் இணைத்துக்கொள்ள படவேண்டும் என்ற கருத்துக்கள் முன் வைக்கப்பட்டிருந்தன.
ஆனால் இங்கு அவ்வாறு யாழ் பல்கலைக்கழக தொல்லியல் துறை சார்ந்தவர்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை.
தற்போது மக்கள் மத்தியில் தொல்லியல் துறையினர் மீது பாரிய சந்தேகங்கள் எழுந்துள்ளன.
ஏன் எனில் குருந்தூர்மலை விவகாரத்தில், தொல்லியல் துறை தொடர்பாக முல்லைத்தீவு நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதி கண்களை ஒன்றை வழங்கி யிருந்தது.
அக் கட்டளையில் தொல்லியல் துறையினர் நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளையை மூன்று தடவைகள் மீறியதோடு, குருந்தூர் மலையில் விகாரை கட்டுவதற்கு ஒத்துழைத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தொல்லியல் துறையினர் இந்த அகழ்வுப் பணி விடயத்திலும் சரியாக நடந்து கொள்வார்களென நாம் எதிர்பார்க்க முடியாது.
அதேவேளை இந்த மனிதப் புழி விவகாரத்தில் சர்வதேச கண்காணிப்பு தேவை எனவும், சர்வதேச நிபுணத்துவத்தின் அடிப்படையிலேயே இந்த அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் எமது தமிழ் மக்கள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நாங்கள் நீதிமன்றையும், சட்டவைத்திய அதிகாரிகளையும் மதிக்கின்றோம். ஆனால் அனைத்துத் தரப்பினரும் இந்த விடயத்தில் சரியாக செயற்படுவார்கள் என எதிர்பார்க்க முடியாதுள்ளது.
குறிப்பாக இங்கு பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரே இங்கு அதிகமாக காணப்படுகின்றனர்.
இந்நிலையில் மக்கள் சார்பாக அங்கு சட்டத்தரணிகள் மாத்திரமே புதைகுழி வளாகத்திற்குள் செல்ல முடியும். மக்களின் பிரதிநிதிகளாக வேறு யாரும் புதைகுழி பிரதேசத்திற்குள் செல்ல முடியாது.
எனவே எமக்கு சந்தேகங்கள் எழாதவாறு இந்த அகழ்வுப் பணிகள் இடம் பெறுவதுடன், உண்மைத்தன்மை வெளிப்பட வேண்டும்.
சர்வதேச மற்றும், ஐ.நாவின் கண்காணிப்புக் குழுக்கள் இல்லாமல் இந்த அகழ்வுப் பணிகள் முன் னெடுக்கப்படுவதில் எனக்குத் திருப்தி இல்லை என்பதையும், தொல்லியல் திணைக்களத்தினையும் நாம் நம்பப் போவதில்லை எனவும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் - என்றார்.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி அகழ்வு விவகாரம்:- சர்வதேச கண்காணிப்பின்றி அகழ்வு முன்னெடுக்கப்படுவதில் திருப்தியில்லை - ரவிகரன்
Reviewed by Author
on
September 06, 2023
Rating:

No comments:
Post a Comment