வௌ்ளத்தில் அடித்துச் செல்லவிருந்த இரு உயிர்களை காப்பாற்றிய மாணவி!
பாதுக்கை - வகை இரிதாபொல பிரதேசத்தில் பெரும் வெள்ளத்தில் நீந்தி இரண்டு உயிர்களை காப்பாற்றிய பாடசாலை மாணவி குறித்த தகவல் எமக்கு கிடைத்துள்ளது.
17 வயதான சரித்மா ஜினேந்திரி மாஇட்டிபே என்ற மாணவியான அவர், பாதுக்கை சிறி பியரதன வித்தியாலயத்தில் கல்வி கற்று வருகிறார்.
அண்மையில் பெய்த கடும் மழையுடன், வகை இரிதாபொல பிரதேசத்திற்கு அருகில் பாய்ந்து செல்லும் வக் ஓயாவின் நீர் மட்டம் திடீரென அதிகரித்து வௌ்ளமாக மாறியது.
நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட இந்த வெள்ளத்தால், பலர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள எல்லாவற்றையும் விட்டுவிட்டு உயரமான இடங்களுக்கு ஓடிச் சென்றனர்.
குறுகிய நேரத்தில் சுமார் 10 அடி உயரத்திற்கு வெள்ளம் உருவாகியுள்ளது.
சரித்மாவின் பாட்டியும் தாத்தாவும் வீட்டின் பின்புறமுள்ள மலைக்கு ஓடிச் சென்று தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டனர்.
அப்போது, வீட்டின் ஜன்னல் வழியாக சரித்மா வௌியேற முற்பட்ட போது, தம்மை காப்பாற்றுமாறு அலறல் சத்தம் கேட்டுள்ளது.
தூரத்தில் இருந்து கேட்ட அலறல் சத்தத்தால் உடனடியாக செயல்பட்ட சரித்மா, அருகில் இருந்த கட்டிடத்திற்கு சென்று பிளாஸ்டிக் கயிற்றை கொண்டு வந்து நீந்தி அவர்களை நோக்கி சென்றார்.
பின்னர் உதவி கேட்டு கதறி அழுத கணவன்-மனைவியை கயிற்றின் உதவியுடன் மூன்று மாடி கட்டிடத்தின் மேல் தளத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சரித்மா ஜினேந்திரிவின் பெற்றோர் இருவரும் வேலை நிமித்தமாக கொழும்பில் தங்கியுள்ளதால் அவரும் அவரது சகோதரரும் பாட்டி மற்றும் தாத்தாவுடன் வசித்து வருகின்றனர்.
அவருடைய சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்கள் அனைத்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
படிப்பிற்குத் தேவையான அனைத்தையும் வெள்ளம் எடுத்துச் சென்றாலும், அவர் தொடர்ந்தும் தன்னம்பிக்கையுடன் இருக்கிறார்.
அவர் இழந்ததை விட இரண்டு உயிர்களைக் காப்பாற்ற முடிந்ததையே மிக உயர்வாக எண்ணுகிறார்.
தன் உயிரைப் பணயம் வைத்து மேலும் இரண்டு உயிர்களைக் காப்பாற்றிய அவர், உண்மையிலேயே வீரப் பெண்மணி அல்லவா!
Reviewed by Author
on
June 05, 2024
Rating:
.jpg)

No comments:
Post a Comment