ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய இலங்கை தமிழன்!
இவ்வாண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள், பிரான்ஸ் தலைநகரான பரிஸில் நடைபெறுகிறது.
கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி முதல் ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாக இருக்கும் எதிர்வரும் ஜூலை 26 திகதி வரையான 101 நாட்கள் அஞ்சல் ஓட்டம் முலம் ஒலிம்பிக் தீபம் சுற்றி வரப்படுகிறது.
இந்நிலையில், கடந்த 14 ஆம் திகதி பிரான்ஸ் சுதந்திர தினத்தன்று, தலைநகர் பரிஸை வந்தடைந்த ஒலிம்பிக் தீபம் பரிஸின் பிரதான வீதிகளில் பயணித்தது. இதில் ஞாயிற்றுக்கிழமை மற்றும் திங்கட்கிழமை ஆகிய இருநாட்களில், நாள் ஒன்றுக்கு 120 பேர் சுமந்து செல்லும் ஒலிம்பிக் தீபத்தின் பவனியில் இலங்கைத் தமிழன் தர்ஷன் செல்வராஜாவும் இணைந்துள்ளார்.
இதன்படி, ஒலிம்பிக் தீபத்தை ஏந்திய முதல் இலங்கையர் என்ற பெருமையை பிரான்ஸ் வாழ் இலங்கை தமிழரான பேக்கரி உரிமையாளர் தர்ஷன் செல்வராஜா பெற்றுள்ளார்.
இதன்போது, லிம்பிக் தீபத்தை ஏந்திய வண்ணம் அவர் 2.5 கிலோமீற்றர் வலம் வந்துள்ளார்.
இலங்கையில் இருந்து 2006 ஆம் ஆண்டு பிரான்ஸ் சென்றடைந்த தர்ஷன் செல்வராஜா, பரிஸ் நகரில் கடந்த வருடம் பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்றதுடன், பிரான்ஸ் ஜனாதிபதியின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்கு பாண் விநியோகம் செய்யும் உரிமையையும் பெற்றுள்ளார்.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன், சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான விருதை பரிஸில் கடந்த வருடம் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Reviewed by Author
on
July 16, 2024
Rating:


No comments:
Post a Comment