வெற்றிடமான மு.கவின் எம்.பி பதவி -கட்சி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.நளீம் தன்னுடைய எம்.பி பதவியை இராஜினாமா செய்தது முஸ்லிம் கா ங்கிரஸின் அரசியல் சரித்திரத்தில் மாத்திரம் அல்ல இலங்கை முஸ்லிம் அரசியல் சரித்திரத்திலும் ஒரு தாக்கத்தை உருவாக்கியுள்ள நிகழ்வாகும். இவரது எம்.பி பதவியானது சுழற்சி முறையில் வழங்கப்படும் என அக்கட்சியின் செயலாளர் நாயகமும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
”முஸ்லிம் காங்கிரஸ் சரித்திரத்தில் கட்சியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு தனக்கு வழங்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நான்கு மாதங்களுக்குள் இராஜினாமா செய்தமை வரலாற்றில் இதுவே முதல் தடவையாகும்.
கட்சியின் செயலாளர் என்ற வகையில் நான் மிகவும் பெருமிதமும், மகிழச்சியும் அடைந்துள்ளேன். கட்சி சார்பாக என்னுடைய நன்றிகளை அவருக்கு தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
இந்த வெற்றிடமான நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடியும் வரை எவருக்கம் வழங்கப்பட மாட்டாது. மாறாக இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முக்கியமாக அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தங்களது பிரதேசத்துக்கு கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள் நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி தமது சபைகளை கைப்பற்றி ஆட்சியை அமைக்க வேண்டும். அதற்கான சகல எற்பாடுகளையும் செய்து பணியாற்ற வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.
இந்த நாடாளுமன்ற உறுப்பினர் பதவி சுழற்றி முறையில் பகிர்ந்தளிக்கப்படும். அதனை கட்சி தீர்மானித்துள்ளது. அந்த வகையில் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தவிசாளர்கள், உயர்பீட உறுப்பினர்கள் தங்களது சபைகளை வென்றால் கட்சி உங்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைத்தந்து உங்களையும் உங்களது பிரதேசத்தையும் கௌரவப்படுத்தும்.” எனவும் தெரிவித்துள்ளார்.
Reviewed by Vijithan
on
March 17, 2025
Rating:


No comments:
Post a Comment