மட்டக்களப்பில் 13 வயது சிறுமி உயிரை மாய்த்த துயரம்
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் 13 வயது சிறுமி ஒருவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நேற்று (27) மாலை இடம்பெற்றுள்ளது.
கொக்கட்டிச்சோலை குளிமடு காஞ்சிரம் குடாவைச் சேர்ந்த 13 வயதான ஒன்பதாம் தர மாணவியே இவ்வாறு உயிரிழந்தார்.
இந்த சிறுமியின் தந்தை வெளிநாட்டில் பணிபுரியும் நிலையில், அவர் தனது தாய் மற்றும் இரட்டை சகோதரிகளுடன் வாழ்ந்து வந்தார்.
தந்தை வெளிநாட்டில் இருந்து இரட்டை சகோதரிகளுக்கு ஆடைகள் வாங்குவதற்கு பணம் அனுப்பியிருந்தார். அடுத்த மாதம் நாடு திரும்பியதும் இந்த சிறுமிக்கு ஆடைகள் வாங்க பணம் வழங்குவதாக தந்தை உறுதியளித்திருந்தார்.
எனினும், தனக்கு ஆடைகள் வாங்க பணம் வழங்கப்படவில்லை எனக் கோபமடைந்த சிறுமி, நேற்று மாலை 5:45 மணியளவில் வீட்டுக் கூரையில் தூக்கில் தொங்கியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனைக் கண்ட உறவினர்கள் அவரை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக பொலிசாரின் ஆரம்பக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஓகஸ்ட் வரை 26 பெண்கள் மற்றும் 12 வயது சிறுவன் உட்பட 105 பேர் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேலும், 2024ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31 ம் திகதி வரை 48 பெண்கள் உட்பட 172 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிசாரின் மாவட்ட தரவுகள் மூலம் தெரியவருவதாக அந்த அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மட்டக்களப்பில் 13 வயது சிறுமி உயிரை மாய்த்த துயரம்
Reviewed by Vijithan
on
September 28, 2025
Rating:

No comments:
Post a Comment