மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மண்சரிவு அபாயம் இல்லை
மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள எந்தவொரு பாடசாலைக்கும் மண்சரிவு அபாயம் இல்லை என்பது தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மேற்கொண்ட மதிப்பீட்டு ஆய்வு அறிக்கையில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக, 'திட்வா' (Ditwa) புயலால் ஏற்பட்ட மண்சரிவு தாக்கத்திற்கு உள்ளான மத்திய மாகாணத்தின் எந்தவொரு பாடசாலையையும் இடமாற்ற வேண்டிய அவசியமில்லை என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியலாளர் கலாநிதி ஆசிரி கருணாவர்தன சுட்டிக்காட்டினார்.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் 3 பிரதான பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 15 நிபுணர் குழுக்களுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், அப்பாடசாலைகளுக்குச் செல்லும் வீதிகள் தாழிறக்கத்திற்கு உள்ளாகி பழுதடைந்த நிலையில் காணப்படுவது தெரியவந்துள்ளது.
எனவே, அவ்வீதிகளை உடனடியாக புனரமைக்க அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதுடன், மத்திய மாகாணத்தில் அமைந்துள்ள அவ்விடங்களில் தொடர்ந்து பாடசாலைகளை நடாத்திச் செல்வது பொருத்தமானது என கல்வி அமைச்சுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மதிப்பீட்டு ஆய்வு அறிக்கையை தயாரிப்பதில் பேராதனை பல்கலைக்கழகம், மொரட்டுவை பல்கலைக்கழகம் மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நிபுணர்கள் மற்றும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் நிபுணர்கள் குழுவினர் பங்கேற்றுள்ளனர்.
மத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு முன்னுரிமை அளித்து, கடந்த 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை இந்த இடர் மதிப்பீட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கடந்த நவம்பர் 27 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை இலங்கையை பாதித்த சீரற்ற வானிலை காரணமாக கண்டி, நுவரெலியா, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பாடசாலைகளின் மண்சரிவு அபாய நிலைமைகள் இந்த மதிப்பீட்டு அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மண்சரிவு அபாயம் இல்லை
Reviewed by Vijithan
on
December 17, 2025
Rating:
Reviewed by Vijithan
on
December 17, 2025
Rating:


No comments:
Post a Comment