யாழில் படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் உடல் நல்லடக்கம்!
யாழ்ப்பாணத்தில் படுகொலை செய்யப்பட்ட விரிவுரையாளரின் உடலானது நேற்றைய தினம் (22) கோம்பயன்மணல் இந்து மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
குறித்த விரிவுரையாளர் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவரது மகள் மற்றும் மருமகனால் படுகொலை செய்யப்பட்டு, தனங்கிளப்பு பகுதியில் வீசப்பட்டிருந்தார். கொலையின் பின்னர் சந்தேகநபர்கள் இருவரும் திருகோணமலை பகுதியில் தலைமறைவாகியிருந்தனர்.
விரிவுரையாளரின் மகனின் இடைவிடாத முயற்சியின் பலனாக, யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்புப் பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும் கைது செய்ததுடன், விரிவுரையாளரின் உடலையும் மீட்டனர்.
இந்நிலையில், உயிரிழந்த விரிவுரையாளரின் இறுதிச் சடங்குகள் நேற்றைய தினம் அவரது இல்லத்தில் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து உடல் கோம்பயன்மணல் மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி மரியாதைகள் செலுத்தப்பட்டன.
இந்த வழக்கில் உயிரிழந்த விரிவுரையாளர் சார்பில் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் நீதிமன்றத்தில் முன்னிலையானார். தனது தாயின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள மகளுக்கு அனுமதி வழங்குமாறு அவர் விடுத்த கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
இதனடிப்படையில், பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் சந்தேகநபரான மகள் கோம்பயன்மணல் மயானத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
மயானப்பகுதியில் எவ்விதமான காட்சிகளையும் பதிவு செய்ய வேண்டாம் எனவும், மீறிப் பதிவு செய்தால் கைது செய்ய நேரிடும் எனவும் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அங்கிருந்தவர்களுக்குத் தெரிவித்தார். ஊடகவியலாளர்களை மயானத்திற்கு வெளியே நிற்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். இருப்பினும், ஊடகவியலாளர்கள் இறுதி நிகழ்வில் கலந்துகொண்டனர்.
சந்தேகநபரைப் பொலிஸார் மீண்டும் அழைத்துச் சென்ற பின்னர், செய்தி சேகரிப்புக்காகப் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவு செய்யலாமா என ஊடகவியலாளர்கள் வினவினர். எனினும், சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அதற்கு மீண்டும் மறுப்புத் தெரிவித்தார். இச்சம்பவத்தின் போது பொலிஸ் தரப்பிலிருந்து எவ்வித எதிர்ப்புகளும் தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Reviewed by Vijithan
on
March 23, 2026
Rating:


No comments:
Post a Comment